Sunday 11 May 2014

வாழ்வை புரட்டிப்போட்ட நாள்

சிறு வயது முதலே கல்விச்சாலைகள் என்னை வசீகரிக்கவில்லை. வேண்டாச்சுமை, விரும்பா தொழில் என விட்டு ஓடவும், தட்டிக்கழிக்கவுமே மனம் காரணங்களை தேடி அலையும். புது விஷயங்களை உணர்தலில் இருக்கும் இன்பத்தை நம் கல்விமுறை-கற்பித்தல் முறை வழங்காததால் வந்த வினை. சலிப்பு தட்டிவிடும்படியான பாடங்கள்; யதார்த்த வாழ்வோடு தொடர்பற்று எங்கோ வேற்று கிரக நிகழ்வு போலவும், நடைமுறை வாழ்வோடு ஒப்பிடுவதை நிறுத்தினாலொழிய விளங்கிக்கொள்ள முடியாத சூட்சுமங்கலாகவும் தெரிந்ததே முதன்மைக்காரணம். என் வாழ்க்கைக்கு உதவும் ஞானம் என்று பள்ளி-கல்லூரியில் கற்றது 10% மீதி 90% வெளியில் தேடி தேடி கற்றவைதான். அதற்காக கல்வி மையங்களை குற்றம் சொல்லி பயனில்லை. கல்வி நிலையங்கள் புத்தகங்களுக்கும், தேர்வுத்தாளுக்கும் இடையே மாணவர்களை தயார் செய்யும் சேவையை மட்டுமே செய்கின்றன.

சூழ்நிலை அழுத்தம், அப்பாவின் ஊக்கம், குரு திசை என்று பல காரணங்களால் திடீரென்று படிப்பதில் ஆர்வமேற்பட்டுவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு கொஞ்சம் காஸ்ட்லி பள்ளியில் சேர்த்தார். கொடுத்த பணத்திற்கு மார்க்கை குவிக்கும் வெறி வேறு. ஒருவேளை உணவு தியாகம், இரண்டு வேளை அரைவயிறு உணவு, மூன்று மணிநேர தூக்கம் அதற்காக அலாரம் வைத்தால் ஹாஸ்டலே வந்து எழுப்பி விட்டால்தான் எழ முடியும். இத்தனை கொடுமையும் டாக்டராகும் கனவிற்குத்தான் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். இதன் பலனாக குடல் சல்லடைக் கணக்காக பொத்துப்போய் அல்சரை உருவாக்கிவிட்டது. 

புரியாப்பாடங்களை படிப்பதில்லை என்ற என் ஜென்மசபதத்திற்கு ஒத்துவருவது போல அனைத்து பாடங்களையும் புரிந்து அனுபவித்துப் படித்தேன். கடைசி ஐந்து ரேங்க்களில் ஆடிக்கொண்டிருந்த நான் பள்ளியில் சக நண்பர்கள் உடனே அணுகும அளவில் பிசிக்ஸ் சிக்கல்களை எளிமையாக புரியவைக்கும் அளவு தேர்ந்தேன். இதுவும் வெளியில் டியூசன் மற்றும் உள்ளார்ந்த தேடலின் விளைவே. இவையனைத்துக்கும் மேலாக ஸ்டடி லீவில் ரூமை விட்டு வெளியே வராமல் ஒரு மாதம் சிறைவாசம் இருந்தேன். “எனக்கு ஒரு நூல்மில்லே எளுதிவெச்சாலும் என்னால ஒரு நாள்கோட இருக்கமுடியாது; இதுவே எனக்கு பெருசா தெரீது கண்ணு” என்று சொல்லி என் பதற்றத்தை குறைக்க முயன்றார். 

ரிசல்ட் வந்தது 91%. மருத்துவம் கிடைக்காது என்று கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. ஆயினும் என் உழைப்பு திறமை மேல் எனக்கு முழு திருப்தி இருத்தால் அப்போதே தேர்வு முறையின் குறைபாடு இது என்று உறுதியாக நம்பினேன்.

என்னைவிட வசதியான என் நண்பன்; தினமும் இரண்டு மணிநேரம் கூட படிக்க மாட்டான்; 69% மதிப்பெண்; மெடிக்கல் சேர்ந்தான். இட ஒதுக்கீடு!. அன்றோடு பத்து உளுத்துப்போன கல்விமுறையும் திராவிட சினிமாத்துறையும் மனதில் ஏற்றி வைத்த சமூகத்திற்கான பிம்பம் உடையத்துவங்கியது. சமூகச்சூழல் குறித்த தேடல் துவங்கியது. 

அப்போதைக்கு பிராப்தமில்லை என்று உடனே மனம் தெரிவித்தாலும், இதற்கான ரியேக்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் துவங்கியது. கோவையை கடக்கையில் மருத்துவக்கல்லூரியை பார்த்தால் தொண்டை அடைக்கும். மனதில் ஆக்ரோஷம் ஆறாது. தூக்கமில்லா இரவுகள். பெரியமனிதர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகளை கண்டால் இட ஒதுக்கீடு குறித்து கடுமையாக விவாதிப்பேன். “நம்பு நாட்டோட சமூக வரலாற்ற பத்தி எங்கட்ட சொல்ற மாதிரி நோவுக்கு சொல்லி புரிய வெப்பீங்களா..? நான் ரிசர்வேசன் ல டாக்டருக்கு படிச்சேன் னு சொன்னா வைரஸ் புரிஞ்சிகிட்டு ஒடம்ப உட்டு வெளிய வந்துருமா..? நோயாளி சாவ மருத்துவம் தடுக்குமா இல்ல ரிசர்வேசன் தடுக்குமா?” என்று பல பதில் சொல்ல முடியா கேள்விகளை செருப்பு என்று எண்ணி வீசி ஆதங்கம் தணிப்பேன்.

எந்த சாதியாக இருந்தால் என்ன? சமூகத்தில் பின்தங்கியோர் என்றால் அவர்கள் தேர்வில் போட்டிபோட திறமையை வளர்த்துவிட முன்னுரிமை தந்திருக்கலாமே தவிர,தேர்வு முடிந்தபின் திறமையுள்ளவனின் இடத்தை பறித்து கொடுக்கக்கூடாது. மீன் பிடிக்க கற்றுத்தரலாம், இன்னொருத்தன் பிடித்த மீனை பிடுங்கி தர கூடாது. இந்த அராஜகத்தால் தேர்வு என்று ஒன்று எதற்கு நடத்தப்பட வேண்டும்? அதற்கு மாணவர்கள் ஏன் உயிரை கொடுத்து படிக்க வேண்டும்?? குலுக்கல் முறையில் ஒவ்வொரு சாதிக்கும் இத்தனை பேர் என்று கொடுத்துவிட்டு வேறு வேலையை பார்க்கலாமே? 

இன்றைக்கு உள்ள மனோநிலையில் நல்லவேளை எம்.பி.பி.எஸ். படிச்சு வெள்ளைகோட் போட்ட “மருந்து ஆலோசகரா” மாறாம போனேன் என்று தோன்றுகிறது. மருத்துவப்பிரதிநிதிகளுக்கும் பெரும்பான்மை  டாக்டர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருவருமே பார்மா கம்பெனிகளுக்கு வேலை செய்பவர்கள் தான். மருத்துவக்கல்வியே அதைநோக்கித்தான் பாடங்கள் எடுக்கின்றன என்பது எனது மருத்துவ நண்பர்களின் கூற்று. நம் நாட்டின் மக்கள்தொகைக்கும் இங்கே உள்ள திறமையான மருத்துவ நிபுணர்கள்களுக்கும் பொருந்தா எண்ணிக்கைதான். இந்த பாவக்குழியில் விழாமல் தப்பினேன். சமாதானம் சொல்லிக்கொள்ள எதோ ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.

சிறந்த மதிப்பெண்களுடன் வெளிவர உங்களுக்கு விஷயஞானம் அதிகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. புரிதலுக்கு அவ்வளவு குறைவான இடமே நம் தேர்வு முறைகள் வழங்குகின்றன. பத்து வருடங்கள் முன்பு மாநில முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் இன்றைய நிலையை எடுத்துப்பார்த்தால் நம் கல்விமுறையின் லட்சணம் விளங்கும். நாமக்கல் பள்ளிகள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, நம் மொத்த கல்விக்கூடங்களும் இதே நிலையில் தான் இருக்கின்றன. வீரியத்தில் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும், அவ்வளவுதான். 

இதனாலேயே ‘நன்கு’ படித்த-உலகறிவு மிக்க தம்பதியர் மாற்று கல்வி முறைக்கு திரும்பி வருகிறார்கள். வீட்டுக்கல்வி முறை இன்று வேகமாக பரவி வருகிறது. பள்ளியில் படித்த மக்கள்தொகையில் சாதனையாளர்கள் சதவீதம், வீட்டுக்கல்வியில் படித்த சாதனையாளர் சதவீதத்தை ஒப்பிட்டால், வீட்டுக்கல்வி பல மடங்கு அதிக சாதனையாளர்களை உருவாக்கும் சக்தியுடையது என்று புரிய வரும். இருந்தாலும் பெரும்பான்மையோடு ஒட்டிக்கொண்டு போகும் குணம் நம்மை வீட்டுக்கல்வி முறையில் இருந்து தடுக்கிறது. காரணம், நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பும் இருக்கும் பெரும்பான்மை மனிதவளத்தின் பொதுத்தன்மைக்கு ஏற்ப தங்களை நெகிழ்த்துகொள்வதுதான். ஆனால் இந்நிலை சமீப காலமாக மாறி வருகிறது. திறமைக்குத்தான் முதலிடம்; சான்றிதழ்களுக்கு கூட முக்கியத்துவம் தருவது பல இடங்களில் குறைந்து வருவதும் நிதர்சனம். 

மேலைநாட்டு கல்விச்சாலைகளிலும், நிறுவனங்களிலும் நம்மவர்கள் ஆரம்ப கட்டத்தில் மிகவும் தடுமாறும் சூழல் இந்த தவறான கல்வி பயிற்சியின் கொடையே. நல்ல அறிவுள்ள இந்திய மூளைகளுக்கு தவறான தீனிகளை புகட்டியதால் வந்த வினையே எனலாம்.

சேர்க்கை முறையிலும், கல்வி முறையிலும், கற்பித்தல் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் லாபிகளால் முடிவு செய்யப்படகூடாது. அதுவரை குழந்தைகளையோ, பெற்றோர்களையோ, பள்ளிகளையோ குற்றம் சொல்லிப்பயனில்லை. அவர்கள் சூழ்நிலைக் கைதிகள். மாணவர்களே, மார்க் அதிகம் வாங்கினால் அது உங்களுக்கு ஒரு மன நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்று மட்டும் எடுத்துக்கொண்டு கல்லூரியிலும் உழைப்பை தொடருங்கள். குறைந்துபோனவர்கள், நம் கல்விமுறையில் நம் திறமையை அளவிடும் முறையில் குறைபாடு என்று உறுதியாக நம்புங்கள். பாரம்பரிய கல்விமுறைக்கு அனைவருமே கவனத்தை திருப்ப வேண்டிய காலகட்டமாகும்.

1 comment:

  1. Neengellaam Doctor aayurunthaa konga desathukku yaar poradarathu.. Athaan antha aathaalukke pudikkaama Singapore anuppi samaathaana paduthirukku. Come back soon!!

    ReplyDelete