Thursday 9 October 2014

அக்னிஹோத்ரம்

அக்னிஹோத்ரம் பாரம்பரிய அறிவியல் தந்த மற்றொரு அற்புதம். காலையும் மாலையும் பத்தே நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். பஞ்சகவ்யம் நிலத்திற்கு உயிரூட்டி, நுண்ணுயிர்சூழலை சீரமைத்து, வளப்படுத்துவது போல, அக்னிஹோத்ரம் காற்று & ஆகாய வெளியை சுத்தப்படுத்தி சீரமைக்கிறது. அதன் ஆற்றல மனித உடல் மற்றும் மனங்களை ஊடுருவுகிறது. போபால் விஷவாயு சம்பவத்தின் பின்னரே மேற்குலகம் அக்னிஹோத்ரத்தின் மகத்துவத்தை உணர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாம் உணர்ந்தோம். பாட்டன், பூட்டன் சொன்னால் பிற்போக்கு என்று ஆயிரம் கேள்விகள் வரும்; வெள்ளையன் சொன்னால் வாயில் விரல்வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்வதுதான் முற்போக்கு அல்லவா. 






இன்று மேற்குலகம், அக்னிஹோத்ரத்தைக் கொண்டாடுகிறது; சுற்றுச்சூழலை சீரமைக்க தினமும் பின்பற்றுகிறது. இன்று புகுஷிமாவிலும் அணுக்கதிர்வீச்சிலிருந்து மீளவும், சுத்தப்படுத்தவும் அக்னிஹோத்ரம் செய்கிறார்கள். அக்னிஹோத்ரம் கொண்டு விதை நேர்த்தி, விவசாய செழிப்பு, மருத்துவம் போன்றவையும் செய்யப்படுகிறது (Homa Farming; Homa therapy). முற்காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் அக்னிஹோத்ர பிராமணர்கள் இருந்தனர். தினமும் அக்னிஹோத்ரம் செய்து மருந்தும் & உரமுமான அதன் சாம்பல் ஊர் குளங்களில் கொட்டப்பட்டது. அதனால் விவசாயமும், மக்கள் உடல்நலமும் செழித்தது. பாரம்பரியமாக அக்னிஹோத்ரம் செய்தவர்கள் கூட இன்று கைவிடும் சூழலைக் கடந்து தற்போது புத்துயிர் பெற்று வளர்ந்து எல்லா தேசங்களிலும் பின்பற்றப்படுகிறது.



ஆரியம், பெண்ணியம் என்று ஈயம் பூசி பிழைப்பு நடத்திய பிரிட்டிஷ் மற்றும் அவர்கள் வாரிசுகளான முற்போக்கு, திராவிட சக்திகளால் சாஸ்திரக்குப்பைகள் என்று பழிக்கப்பட்ட ஹோம வகைக்குள்தான் அக்னிஹோத்ரமும் அடங்கும். இவ்வாளவு தெரிந்தும் 'பூவுலகை' காக்க அவதாரமெடுத்த கம்யூனிஸ்ட்கள் இவற்றை புறக்கணித்தே வந்தனர். பாரம்பரிய ஞானத்தை மூடத்தனமென்று புறக்கணித்து வந்த கம்யூனிஸ்ட்கள் கூட கேரளாவில் "வேத அறிவியலை" ஆய்ந்து அறிய கருத்தரங்கம் நடத்தி, இவ்வளவு காலம் அவர்கள் செய்த அறியாமைப் பிழைகளை ஒப்புக்கொண்டு திருத்திகொள்கிறார்கள். ஆனால் இவ்வளவு காலம் இந்த முற்போக்கு மயக்கத்தால் நாம் இழந்தவற்றிற்கு என்ன பரிகாரம்?


ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்தில் பாத்க்கப்பட்ட பகுதிகளை
அக்னிஹோத்ரம் செய்து சீராக்கும் முயற்சியில் அந்நாட்டவர்கள்.



அக்னிஹோத்ரம் பற்றி சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. மேலே உள்ள வரிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விளக்கமாக ஒரு புத்தகமே எழுதும் அளவு விஷயங்கள் உள்ளன. ஆர்வமுள்ளோர் தேடிப்படிக்கவும். (அக்னிஹோத்ரம் எப்படி செய்யவேண்டும், அதன் தாத்பர்யங்கள் என்ன போன்றவற்றை கீழே கமெண்டில் லிங்க் கொடுத்துள்ளேன்). இயற்கை மீது பற்றுள்ளோர் உங்கள் ஊரில், கோயில்களில் அக்னிஹோத்ரம் நடைபெற ஆவண செய்யவும். இந்த அக்னிஹோத்ரத்திற்கும் நாட்டுப்பசுவின் நெய்யும் சாணமுமே மூலப்பொருள். நாட்டுப்பசுக்கள் நம்மையும், பூமியையும், காற்றையும், நீரையும், விண்ணையும் வளப்படுத்தி, புனிதப்படுத்த மூலகாரணமாவதால் நாட்டுப்பசுக்கள் புனிதம் தான்!




 
 
image
 
 
 
 
 
விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!
படம்: கோழிக்கோடில் அக்னிஹோத்ரம், வேத சங்கத்தினர் நடத்தியது ச.நாகராஜன் போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும் வேத...
Preview by Yahoo
 


 
 
image
 
 
 
 
 
Ajit Vadakayil: NITRIC OXIDE IN AGNIHOTRA, YOGA,...
NITRIC OXIDE IN AGNIHOTRA,  YOGA,  AYURVEDA AND THE VEDAS-  CAPT AJIT VADAKAYIL One of my readers by the name of Chanchal accused me o...
Preview by Yahoo
 


 
 
image
 
 
 
 
 
Ajit Vadakayil: AGNIHOTRA, GHEE, COW DUNG FUEL...
AGNIHOTRA HOMAM,  QUANTUM OIL CLARIFIED BUTTER ,  DRIED COW DUNG CAKES-  CAPT AJIT VADAKAYIL The British are very proud of their Ston...
Preview by Yahoo
 


 
 
 
 
 
 
Homa Therapy International | Web Portal for Agnihotra Ayurvedic Copper Pyramid Healing Fire
Homa Therapy Videos Agnihotra - a Talk by Shree Vasant Paranjpe (part 1) (part 2) (part 3) (part 4) Agnihotra Demonstration Video (Mantra sub-titles in English script)
Preview by Yahoo
 


 
 
image
 
 
 
 
 
Agnihotra.org | Your source for Agnihotra & Homa Therap...
Below you may download the written transcripts for learning mantras, as well as the audio files.
Preview by Yahoo
 



Friday 3 October 2014

நீராதாரங்கள்

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குளம் மற்றும் ஏரி, கிராமத்தின் உயிர் போன்றது. உண்மையான மாரியம்மன் கோயில்கள் அது. நிலத்தடி நீருக்கும், ஈரத்தன்மைக்கும் ஆதாரம். ஏரி குளங்கலுக்கும் கோயில்களுக்கும் தொடர்புண்டு. நீர் வரத்து வாய்க்கால்கள், மற்றும் வடிகால் வாய்க்கால்கள் குளங்களின் உயிர்நாடிகள். ஒவ்வொரு கிராமத்திலும் ஆல் (கிழக்கு), அரசு(மேற்கு), இச்சி (வடக்கு), அத்தி (தெற்கு) போன்ற மரங்கள் நடுவது நியமம் போல குளங்களும் மிக முக்கிய அங்கங்களாகும். மன்னர்கள் முதல் தேவதாசிகள் வரை பல தரப்பினர், தங்கள் உயிர், பொருள் என அனைத்தும் செலவு செய்து, பல பலிகள் எல்லாம் கொடுத்து குளத்தை வெட்டியிருப்பார்கள். ஜலாசய சாஸ்திரம் என்று இதற்குரிய தொழில்நுட்பமே உள்ளது. கொங்கதேசத்தில் குலகுருக்கள் இவ்வாறான ஏரிகளை அமைக்க கிராம வாஸ்து பார்த்து, இடம்கண்டு,  வாய்க்கால்வழிகள் அமைக்க ஆலோசனை கொடுத்துள்ளனர். குள எல்லைகளில் பனை மரங்களும், குளத்தைக் காக்க கருப்பனாரும் இருப்பார். இன்று பொதுநலன், தர்மம் என்பதை சிறிதும் நினைத்துப் பார்க்காத பணக்கார, ரியல்எஸ்டேட், மற்றும் திராவிட பூதங்கள் அந்த குளங்களையும், வாய்க்கால்களையும் விழுங்கி வருகின்றன. கிராம இளைஞர்கள் தங்கள் ஊர் நீராதாரங்களின் பரப்பளவு, வாய்க்கால்கள் போன்றவற்றை தொகுத்து அறிந்து வைத்திருக்க வேண்டும். நதிகள் இணைப்பு, அணைகள் போர்வை எந்த அளவு உதவுகின்றன என்பது வாதத்துக்குரியது. ஆனால் ஏரி குளங்கள் என்றென்றைக்கும் சாஸ்வதமானது. 

ஏழு ஏரிகள் வெட்டி அதன் காரணமாக உயிரை இழந்த
மல்லை ஸ்ரீ தொண்டமா கவுண்டர் 

அமிர்தவல்லி என்னும் தேவதாசி வாய்க்கால் வெட்ட உபயம் தர
அமிர்தவல்லி வாய்க்கால் என்று பேரோடு இருந்த பருத்திப்பள்ளி ஏரியின் நிலை..

கற்பகாயி, சுந்தராயி என்று இரு தேவதாசிகள் தங்கள் கைப்பொருள் அனைத்தையும் கொட்டி கடைசியில் தங்கள் உயிரையும் கொடுத்து வெட்டி வைத்த ஏழூர் ஏரியின் நிலை.

அநேகமாக எல்லா ஊரிலும் ஏரிப் பிரச்னை உண்டு. மீட்க நினைத்தால், முதலில் அந்த ஏரியில் ஒரு பொங்கல் வைத்து ஏரியைக் காக்க ஸ்தாபிக்கப்பட்ட கருப்பனார் அல்லது முனியப்பனுக்கு ஒரு பலி கொடுத்துவிடுங்கள். உங்களின் வெற்றி எளிதாகும். வருடந்தோறும் அக்கோயில் விழா ஒழுங்காக நடந்தாலே குளத்தின் எல்லைகள் அனைவரும் அறிந்து குளத்தின் பராமரிப்பை சரியாக பார்ப்பார்கள். 

தாசில்தார்-கலக்டர் அலுவலகம் சென்றால் உங்கள் ஊர்-ஏரி குளத்தின் பழைய FMP மேப் கிடைக்கும். RTI போட்டு பெற்றுவிடலாம். தற்போது ஆன்லைனில் கூட கிடைக்கிறது. அதைக்கொண்டு ஊராட்சி நிர்வாகம் மூலம் உங்கள் குலத்தின் இடங்களை கண்டறிந்து மீட்டுவிடலாம். தற்போது நூறு நாள் வேலைப்பணிகளில் ஏரி குளப் பணிகளை சேர்த்துள்ளதால் வாய்க்கால் குளங்களை சரி செய்வது எளிது. பொதுப்பணித்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் உபயோகமான தகவல்களைப் பெற முடியும் (ஒரு நல்லவன் கூட இருக்கமாட்டான் என்பதில் உடன்பாடு இல்லை). குளங்களை மீட்கும் எண்ணமுள்ளவர்கள், தனிசெய்தியில் தொடர்பு கொண்டால் எனக்கு தெரிந்த தகவல்களை-தொடர்புகளை பகிர்ந்து கொள்கிறேன். வழிகாட்டத்தான் முடியும். உங்கள் ஊருக்கு-உங்கள் வாரிசுகளுக்கு நன்மை செய்ய யுகபுருஷன் வர மாட்டான் நீங்கள் தான் செய்யணும். 
மொளசியில் வள்ளல் வேலப்ப கவுண்டர் பாண்டியன் படைக்கு உணவிட்டு
அன்னத்தியாகி பட்டம் பெறக காரணமாக இருந்த ஏரியின் நிலை.
புதிய குளங்கள் வெட்டுவதை விட ஏற்கனவே பல நுட்பமான விசயங்களை ஆய்ந்துணர்த்து வெட்டப்பட்ட பழைய ஏரி, குளங்களே சிறந்தவை. தர்ம நூல்கள் கூட, புதிய தர்மங்களை செய்வதை விட தடைபட்ட தர்மத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்புண்ணியம் என்கின்றன. (முக்கியமாக, பழமையான கோயில்கள் பூஜைகள் இன்றி இருக்க, புதிய கோயில்களை கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இது தேவையான செய்தி)
ஈரோடு மாநகரில் இருக்கும் ஏரி கருப்பராயன் கோயில். ஆனால் ஏரி எங்கே??
இந்த கோயில் அமைவிடம் "பெரியார் நகரில்" புரிந்ததா..??

பல ஊர்களில் ஏராளமான இளைஞர்கள் இதுபோல அவர்கள் குளங்களை மீட்டுள்ளனர். இதை நான் எழுதியது, கிராமத்துக்கு-இயற்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு..  "எங்கீங்க.. யாருங்க செய்யறது.. எவன்க கேப்பான்" னு சலிப்போடு பேசுபவர்கள் இங்கே கருத்திட வேண்டாம்; நேராகப் போய் குழியை வெட்டிப் படுத்துக் கொள்ளவும். அதுதான் நம்மால் எளிதாக செய்யகூடிய வேலை. இந்த சோம்பேறிகள் பிறருக்கும் சோர்வைப் பரப்புவதோடு செய்பவனையும் எளிதில் கோமாளியாக்கிவிடுவார்கள்.

Thursday 25 September 2014

மல்லசமுத்திரம் தொண்டைமா கவுண்டர்

மல்லசமுத்திரம் சமஸ்தானம் கொங்கதேசம் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருசெங்கோட்டு பகுதி) உபநாடாகும். இப்பகுதியை ஆண்டு வந்தவர் சிற்றரசர்களான பட்டக்காரர்களில் புகழ் பெற்றவர் தொண்டைமா கவுண்டர். துணிச்சல், போராற்றல் மதிநுட்பம், தண்மையான குணம் நிறைந்தவர். பல புலவர்களை ஆதரித்து தர்மம் வளர்த்தவர். தொண்டைமான் என்பது இவர் பெற்ற விருதுப் பெயர். அகளங்க சோழன் என்பதும் இவர்கள் முன்னோர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்ட விருதுப்பெயராகும். நாமக்கல் கோட்டையை மீட்க சோழனுக்காக போராடி வென்றமையால் சோழ அரசன் விஜயராகவ பட்டம் கொடுத்து சிறப்பித்தார். நவாபு ஆட்சியில் பகதூர் பட்டம் பெற்றார். இவ்வளவு பட்டங்கள் அவரது திறமைகளுக்கு கிடைத்த அங்கீகாரங்களாகும்.

தென்னாட்டில் சிலகாலம் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலத்தில், பேரரசுகளிடையே போர் நடந்து வந்தது. போர்க்காலத்தில் பேரரசுகளுக்கு வரிகள் செலுத்தவேண்டியதில்லை என்பதால் தொண்டைமாக்கவுண்டர் மக்களிடம் வரியை வசூலித்து கூட தன் கைப்பொருளையெல்லாம் செலவு செய்து ஏழு பெரும் ஏரிகளையும் அதற்குண்டான நீர்வழிகளையும் வாய்க்கால்களையும் வெட்டுகிறார். அனைத்தையும் ஏழே ஆண்டுகளில் முடிக்கிறார்!. மல்லை நாட்டை கிழக்கும் மேற்க்குமாக சுற்றி பாய்ந்த திருமணிமுத்தாறு மற்றும் பொன்னியாற்றின் நீரை கொண்டு தனது பூமியை வளம் கொழிக்கும் நாடாக்கினார். கொழந்கோண்டை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, ஊமையாம்பட்டி பெரிய ஏரி, செட்டி ஏரி, கோட்டப்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, மங்களம் ஏரி என்பவையாம்.

போர் முடிந்து நவாபு வரி கேட்க, போர்க்காலத்தில் வரி கொடுப்பதில்லை என்றும், அப்படி வசூல் செய்த வரியை செலவு செய்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். வரியை கட்டு என்ற நிர்பந்தத்திற்கு மறுக்கிறார். மன்னிப்பு கேட்டு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டு என்ற சமரசத்திற்கும் உடன்படவில்லை. யானையை கொண்டு தலையை இடர செய்ய தண்டனை விதிக்கபடுகிறது. அவர் வெட்டிய ஏரிக்கரையிலேயே கொடூரமாக உயிரை விடுகிறார். கற்புநெறி பிறழாத அவரின் தர்மபத்தினி சின்னாத்தா யார் தடுத்தும் கேளாமல் திருமணிமுத்தாற்றின் கரையில் தொண்டைமாகவுண்டரோடு சிதையில் சேர்ந்து தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்.

அவர்கள் உயிர்விட்ட இடத்தில் அவர்களுக்கு எழுப்பப்பட்ட கோயில் தீப்பாஞ்சம்மன் கோயில் என்று வழிபடப்படுகிறது. செல்வதற்கு தடம் கூட இல்லாத, இக்கோயிலின் அவலக் கோலம்தான் இந்த படங்களில் நாம் பார்ப்பது. சுதை வேலைப்பாடுகளோடு அழகு மாறாமல் இருக்கின்றது. உள்ளே பாம்பு சட்டைகளும், சுற்றி குப்பைகூலமும் நிறைந்து கிடக்கின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையன் ஒருவன், தென்னிந்த கிராமங்கள் பற்றிய தனது புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி குறிப்பிடுகையில், தான் நிற்கும் மலை தவிர சுற்றியிருக்கும் பூமியனைதும் இருக்கும் பசுமை குறித்து பூரித்து குறிப்பிடுகிறார். தன் உயிரையும், பொருளையும் கொடுத்து, இவ்வளவு வளமைக்கும் காரணமான தொண்டைமாக்கவுண்டர் நினைவிடம் இருக்கும் நிலை, திருசெங்கோட்டு மக்களின் நன்றியுணர்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஏரிகள் மட்டுமின்றி மல்லசமுத்திரம் ஸ்ரீ சோழீசர் கோயில், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில், மாமுண்டி சிதம்பரேஸ்வரர் கோயில், மங்களம் அழகுநாச்சியம்மன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். அவர் சிலை மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோயிலில் உள்ளது.

இயற்கையை கெடுக்காத நீர் சேமிப்பு/பாதுகாப்பு என்றால் ஏரி, குளங்கள் தான். நிலத்தடி நீர் செறிவூட்டல், மழைநீர் சேமிப்பு அனைத்தும் சாத்தியம். தொண்டைமாக்கவுண்டர் போன்றோர் உயிர் கொடுத்து வெட்டிய நீர்நிலைகளை காப்பாற்றாது, முள்ளும் மண்ணும் மூடவிட்டு, நிலத்திருடர்கள் பிளாட் போட்டு விற்பதை வேடிக்கை பார்த்துவிட்டு தண்ணீர் பஞ்சம் என்று சொல்வது யார் செய்த தவறு? மன்னராட்சி காலங்களில் சிறப்பாக இருந்த நீர் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஏரி குளங்கள் சீரமைந்தால் தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்பது புலனாகும். மழையாகிய மாரி கடைசியாக வந்து நிற்குமிடம் ஏரி, குளங்கள்தான். அவைதான் உண்மையான மாரியம்மன் கோயில்கள்.

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா மட்டும் பேசாம அமைதியா இருந்திருந்தா, காவேரி, கிருஷ்ணா, பாலாறு, பவானி, முல்லைப்பெரியாறு என்று எந்த நதிநீர் பிரச்னையும் இன்றிருந்திருக்காது. திராவிட மாயையில் சிக்கிய மக்கள் சக்தியை தன் பக்கம் வைத்திருந்த அவர், ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமை குரலை ஒலிக்கவிடாமல் நீர்த்துப் போகச்செய்தார். இன்று நீர்ப்பிச்சைகாரர்களாக, நாடோடிகளாக பலர் மாறியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அடிக்கடி ஏற்படும் வறட்சியின் காரணமாக வெட்டுக்கு விற்கப்பட்ட கோடிக்கணக்கான நாட்டுபசுக்கள் தன் இறுதிநாள் வரை வாழ்ந்திருக்கும்.

இருளர்கள்

இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள் என்றளவில் மட்டுமே கற்பிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் இயற்கை மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள். குஷ்டம், கேன்சர் முதல் நவீன மருத்துவத்திற்கு சவால் விடும் சிக்கலான வியாதிகளுக்கு மிக எளிய மருந்துகளை வைத்துள்ளார்கள். மந்திரித்து விடுதல்-பாடம் போடுதல் நாமும், Pranic Healing என்று வெள்ளையர்களாலும் சொல்லப்படும் மருத்துவமுறை வரை பின்பற்றுகிறார்கள். கேரள சர்க்கார் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மருத்துவம் செய்யலாம் என்று அங்கீகரித்துள்ளது. அவர்களை வெள்ளையர்கள் மிக நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். பணமோ புகழோ எதிர்பார்ப்பதில்லை; மரபுச்செல்வம் யாராலோ வணிகமாவதை கண்டுகொள்வதும் இல்லை. பாம்புகள் போன்ற நுண்ணுணர்வு மிக்க பிராணிகளை கையாளும் அவர்கள் இயற்கையின் நுட்பகளை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். கொங்கதேசத்தில் சித்தாண்டிகள், குப்பண்ண பரதேசியார், தம்பிக்கலைஐயன், வாழைத்தோட்டத்து ஐயன் போன்றோர் பின்பற்றியதும் இதே வைத்திய முறையே. அக்காலம் தொட்டு இன்றளவும் கொங்கதேசப்பகுதிகளில் இருளர்கள் பெருமளவு வசித்து வருகிறார்கள். ஆதிக்குடிகளான அவர்கள் கன்னியாத்தா என்று சப்த கன்னியர்களையும், சிவபெருமான் மற்றும் ‘ரங்கநாதர்’ வழிபடுகிறார்கள். ஆதிப் பழங்குடிகளான அவர்கள் பேசுவது இருள பாஷை, இதன்மூலம் தொல்காப்பியத்தில் சொல்லியபடி 'திசை சொற்கள்' ஏராளம் உண்டு எனலாம்.
சர்க்கார் திட்டங்கள் போட்டு, உளுத்துபோன மெக்காலே கல்வி கொடுத்து அவர்களையும் நகர 'நாகரீக' சமூக சகதிக்குள் இழுக்க பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நவீன சமூகம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து நிம்மதியாக ஆரோக்கியமாக வாழும் கலையை..

சதா நிரோகி

ஹிதஹாரி, மிதஹாரி, ருதுஹாரி சதா நிரோகி!
அதாவது எவன் ஒருவன் ஊட்டச் சத்தான உணவை உண்கிறானோ, கொஞ்சமாகச் சாப்பிடுகிறானோ, பருவகாலங்களுக்கேற்ற உணவைச் சாப்பிடுகிறானோ அவன் எப்போதும் வியாதியற்றவனாக இருப்பான்! - சரகர்
சரஹர்-நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய மாபெரும் மருத்துவ மேதை. சரஹ சம்ஹிதை என்ற அவரது நூல் பல்வேறு மருத்துவ ஆயுர்வேத நூல்களுக்குக்கெல்லாம் மூல நூல்.
(ஹித-சத்துள்ள; மித-அளவான; ருது-பருவம்; சதா- எப்போதும; நிரோகி-நோயற்றவன் [ரோகம்-நோய், ரோகி-நோயாளி])
நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்

அசைவம்

அசைவம் முதலில் அரிதான/விழாக்கால உணவாக இருந்து இப்போது வெகுஜன-அன்றாட உணவாக உருவெடுக்கிறது.. இன்றுள்ள மக்கள் தொகைக்கு, இது இயற்கைக்கும் சரி.. மனிதர்களுக்கும் சரி.. சமூகத்துக்கும் சரி.. மிகவும் ஆபத்து.. பல்வேறு கொடும்விளைவுகளுக்கு அடிநாதமாக இருக்கப்போகிறது..

பெண்கள் சொத்துரிமை

பெண்கள் தங்கள் சொத்துரிமையை தங்கள் சகோதரனுக்காக இலவசமாகவோ, சொற்ப பணம் பெற்றுக்கொண்டோ விட்டுக்கொடுக்கிறார்கள். இன்றைய சட்டங்கள் பெண்கள் நினைத்தால் தாங்கள் விட்டுக்கொடுத்ததை மீட்டுக்கொள்ளவும் பல ஓட்டைகள் வைத்துள்ளன என்பதும் வேறு விஷயம். பெரும்பாலும் சிறுவிவசாயிகளை கொண்ட நாட்டில் நிலங்கள் பிரிக்கப்பட்டால் குடும்பம் நடத்தும் அளவுகூட வருமானத்தை பெற முடியாது. சொத்தை பெற்ற பெண்ணும் மைல்கள் தாண்டி வந்து விவசாயம் செய்ய இயலாது என்பது வேறு விஷயம். நம் நாட்டு சட்டங்கள் குடும்பங்களுக்குள் புகைச்சல் வர எவ்வளவு முடியுமோ அவ்வளவு சட்டங்களை "தேசபக்தர்" கும்பல்களின் அழுத்தத்தால் உருவாக்கியுள்ளன. குறைந்தபட்சம் நில விஷயத்திலாவது சொத்துரிமை சட்டம் திருத்தப்பட வேண்டும். சிறுவிவசாயிகள் பெண்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள். தங்கள் கல்யாணத்துக்காகவும் சீர்களுக்காகவும் பல சிரமங்கள் பட்ட பெற்றோர் மீது பெண்களின் இந்த குடும்பப் பாசம் இல்லாவிட்டால் இன்று பலரின் மிராசு டம்பமெல்லாம் என்றோ காற்றில் பறந்திருக்கும். பெண்கள் கூட குடும்ப பாசம் என்று சொல்லலாம்; ஆனால் அவர்கள் கணவர்கள் சொந்தம் முக்கியம் என்ற காரணத்தால் சொத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். பெண்கள் மற்றும் அவர்கள் கணவர்கள் போட்ட பிச்சையை மறந்த நன்றிகெட்ட விதிவிலக்குகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக பெரும்பான்மையை குற்றம் சொல்ல முடியாது.
*பெண்கள் விவசாயத்தின்-கிராமத்தின் கண்கள்*

அறநிலையத்துறையின் அக்கிரமங்கள்

கோயில்களில் அறநிலையத்துறையின் அக்கிரமங்கள் உச்சகட்டத்தில் இருக்கின்றன. கோயில்கள் என்றால் வணிக மையம் என்ற பிம்பம் வருமளவு மாற்றி வைத்துள்ளனர். கோயில்களில் நடக்கவேண்டிய நிர்வாகம் சீர்கெட்டு, பூஜைகள் முறையின்றி போய், கோயில் பணியாளர்களை பஞ்சத்தில் விட்டு, அதனால் அவர்கள் பக்தர்களிடம் சுரண்டல் வேலையை ஆரம்பித்து வைத்துள்ளனர். இது மட்டுமின்றி, கோயில் நிலங்கள், சொத்துகள், நகைகள், கலைப் பொக்கிஷங்கள், சிலைகள் என்று சொத்துக்கள் பெருமளவில் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. கோசாலைகள், தர்ம ஸ்தாபனங்கள், பாடசாலைகள், மடங்கள் என்று அனைத்தும் சீர்கேட்டில் இருக்கின்றன. கோயிலில் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் சேவைக கட்டணங்கள் கயவர்களின் கைக்கே செல்கின்றன. இனி கோயிலுக்கு கொடுக்க நினைக்கும் பணமோ பொருளோ, கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்கவும், பழமையான கோயில்களை காக்கவும் போராடி வரும் அமைப்புக்களுக்கு கொடுப்பது என்று முடிவெடுத்துள்ளேன். இனி ஒரு பைசா செலவு செய்து எந்த சேவையும் (அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள) கோயில்களில் பெறப்போவதில்லை. தங்கள் சொந்த வேலைகள், குடும்பம், சொத்து சேர்ப்பது என்று அனைத்தையும் விட்டு பல பயங்கர அச்சுறுத்தல்களையும் தாண்டி நற்காரியங்கள் செய்பவர்களுக்கு நேரடியாக களத்தில் முடியாவிட்டாலும் பணமாகவாவது, உதவுவதே தெய்வத்துக்கு செய்யும் சேவையாகும்.
நாட்டுப்பசுக்களுக்காக பெருமுயற்சிகள் செய்துவரும் கொங்க கோசாலை அமைப்புக்கு சிங்கபூர் நண்பர்கள் சேர்ந்து ஒரு தொகையை கொடுத்துள்ளோம். அதுபோல, இனி ஆலய வழிபடுவோர் சங்கம், ரீச் பவுண்டேசன் போன்ற அமைப்புக்களுக்கு என்னாலான வழிகளில் உதவ நினைக்கிறேன்.

திருவருள்

திருவருள் என்ற படம். அதில் முதல் ஐந்து நிமிடங்களிலேயே ஒரு அற்புதமான வசனம் வரும். "எல்லா நம்ம கைலதான் னு நெனைக்கற வரைக்கும் தான் இன்பம்-துன்பம் எல்லாம் நம்மை பாதிக்கும்... நம்மையே அவன்கிட்ட ஒப்படைச்சிட்டா, எதுவும் நம்மள பாதிக்காது" னு பாமர மொழியில் சொல்வார். உள்ளார்ந்த அன்பினாலோ, வெளிப்புற அழுத்தம் தாங்க இயலாமலோ அந்நிலை வரலாம். அந்த மனநிலையை அடைவதும், அந்நிலையில் வாழ்வதும், அதனால் கிடைக்கும் லேசான மனமும் அனுபவித்துணர வேண்டிய சுகம். வேலைப்பளு, சமூக அழுத்தங்கள், மனக்குமுறல்கள், பகை-பழியுணர்ச்சி, ஏக்கங்கள் என அனைத்து இரும்பு குண்டுகளும் நம்மில் இருந்து உதிர்ந்து போகும். அந்த மனநிலையில்தான் தெய்வத்தை உணர முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படியான மனநிலையால், நிகழ்காலத்தில் அதிகம் வாழ முடியும்; பொறுப்பின் அழுத்தம் பெரிதாக பாதிக்காது; தவறு செய்யும் எண்ணம்-சலனம் ஏற்படாது.
கோயில்கள் காவல்-நீதித்துறை பணிச்சுமையை குறைக்கும் என்பதன் அர்த்தமும் இதில்தான் உள்ளது.

முடிக்கு அடிக்கும் டை

முடிக்கு அடிக்கும் டை மூலம் கடுமையான விஷம் ஸ்லோ பாய்சன் போல உடலில் இறங்குகிறது. சேலத்தில் ஒரு அரசியல்வாதிகூட இந்த டை விஷத்தின் தாக்கத்தால்தான் இறந்தார் என்ற விஷயம் பரவலாகவில்லை. தலைவலியில் இருந்து கண் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு, ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் என்று பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. இந்த டையை தயாரிக்க இயற்கை காயப்படுகிறது. நம் முன்னோர்களும் முடிக்கு டை அடித்துள்ளனர். சேதாங்கொட்டை என்னும் செடியின்மூலம் பெறப்படும் விதைகளை குத்தி சாறு எடுத்து பயன்படுத்துவார்கள். ஒன்றுமில்லை, நம்ம கிராமத்து வண்ணார சாதியினர் துணியில் குறியிடும் மை அதிலிருந்துதான் செய்கிறார்கள். இதன் ஆயுளும் அதிகம், உடலையும் கெடுக்காது.
(அந்த செடியை கொண்டு ஒரு புது சுதேசி பொருளை கண்டுபிடிக்கலாம்; காப்புரிமை கேட்க மாட்டேன்  )

வளர்ந்த நாடுகள்

அரசியல்வாதிகள் பேசும்போது வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளை குறிப்பிட்டு அந்த நாடுகளைப் போல இந்தியாவை மாற்றுவோம், என்று சொல்கிறார்கள். அது தவறு, அது சாத்தியமுமில்லை. பணப்புழக்கமுள்ள தொழில்களை மட்டும் செய்வதாலும், பெரு நிறுவனங்களின் மையங்களை கொண்டிருப்பதாலும் தான் இந்த பணக்கார தோற்றம். ஏராளமான ஏழை நாடுகளின் இயற்கை மற்றும் மனித வளங்களை சுரண்டியும் அழுக்காக்கியும்தான் பணக்கார நாடுகள் தங்கள் பகட்டான தோற்றத்தை தக்க வைக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் இந்த தொழில் முறை சாத்தியமில்லை. எல்லா நாடுகளும் சுரண்டலை கையிலெடுத்தால் உலகம் தாங்காது. மலைகளும், காடுகளும், நதிகளும் சீரழிந்து போகும். உலகமே மனித நுகர்வுக்குத்தான் என்ற வெளிநாட்டு சித்தாந்தங்களின் வெளிப்பாடு அது. நம்மை இயற்கையோடு இணைத்துக்கொண்டால் வாழ்வு பூரணமாக இருக்கும். அதை தற்போது பல நண்பர்கள் அந்த வாழ்க்கை முறையில் எல்லா கோணங்களிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
ஆக, வளர்ச்சிப் பொருளாதாரம் என்றும் இந்தியாவை அதுவாக இதுவாக ஆக்குகிறேன் என்றும் சொன்னால், நீங்க எதுவாகவும் ஆக்க வேண்டாம் இந்தியா சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை மிகச் சிறப்பாகத்தான் இருந்தது; காலனிய, கம்யூனிச, முற்போக்கு குழப்பங்களால் சீரழிந்ததை மீட்டுக் கொடுங்கள் போதும் என்று சொல்லுங்கள்.

Tuesday 2 September 2014

இரவச்சம்


'பசுவுக்காகவே எனினும்' தண்ணீர் கேட்டு இரப்பதாக இருந்தால் அது அந்த நாக்குக்கு கேவலமே என்று பொருள் கூறுகிறார்கள். மாறாக, பசுவுக்கு நீர் வேண்டும் என்று 'இரந்தாலுமே' அது அந்த நாவிற்கு இழிவை தராது என்று பொருள்படுவதாக தமிழறிஞர் ஒருவர் சொன்னார். எனக்கும் இரண்டாவது பொருளே சரியெனப்படுகிறது.

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்
(அதிகாரம்:இரவச்சம்; குறள்:1066)



எது எப்படியானாலும் பசுவைப் பேணுவதை மிகப்பெரும் தர்மம் என்ற அடிப்படையில் தான் வள்ளுவரும் சொல்லியுள்ளார். பசுவை தொழும் இடம் என்னும் பொருளில் வந்ததுதான் தொழுவம் என்னும் பேர். கோயில் என்பது கோ+இல், ஆலயம் என்பது ஆ+லயம் என ஆன்மீகத்தின் அடிப்படைகள் அனைத்தும் பசுவை சுற்றியே உள்ளன. (பசு என்றால் இந்திய நாட்டுப்பசு மட்டுமே; வேறு எதுவும் பசுக்கள் இல்லை. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

படம்: Tamil Wisdom, EJ Robinson, 1873

Saturday 30 August 2014

விநாயகர் நினைவுகள்

கொங்கதேச ஆவணங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடத்தில் காணலாம். அண்ணமார்சாமி கதையில் பிள்ளை வரம் நிறைவேற குளம் வெட்டி விநாயகர் பிரதிஷ்டை செய்தார் கோளாத்தாக் கவுண்டர். அது மட்டுமின்றி அண்ணமார் கதை முழுக்கவே விநாயகர் வழிபாடு இருப்பதை காண முடியும். 




தீரன் சின்னமலை காரையூர் மேலப்பாளையத்தில் ஐந்தடி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வித்தார். வெள்ளோட்டில் சாத்தந்தை கூட்டத்தில் பிறந்து வீரபாண்டியன் அமைச்சராகி பின்னர் ஊத்துக்குளியில் நாடமைத்துப்போன காளிங்கராயர் வாய்க்கால் வெட்டியபின், அது துவங்கும்  இடத்தில் நெளிந்த வாய்க்கால் அமைப்புக்கு யோசனை வர காரணமான நாகருக்கு கோயில் வைத்தார். அதே கோயிலில் விநாயகரும் உண்டு. காளிங்கராயர் பிற்கால பாண்டியர் காலத்தவர் என்பதால் விநாயகரும் அவர் பிரதிஷ்டை செய்ததே என்று நம்பலாம். 


கொங்கதேசவரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு தலையநாடு கன்னிவாடி கன்னகூட்ட மன்றாடியார்களுடையது. அவர்கள் கன்னிவாடியில் இருந்து மோரூர் இடம்பெயர்ந்த போது அவர்கள் பூர்வீகத்தில் இருந்த வெள்ளைவிநாயகரை மோரூர் நாட்டிலும் பிரதிஷ்டை செய்தனர். இவர்கள் குலகுரு ஒருமுறை சஞ்சாரம் வந்தபோது கோயில் பண்டாரம் அவமரியாதை செய்யவே கோயில் வெள்ளைவிநாயகரிடம் வேண்டி பாடவும் குபேர மூலையை பார்த்திருந்த விநாயகர் விக்ரகம் எம மூலை பக்கம் திரும்பிவிட்டது. பயந்து போன மக்கள் பட்டக்காரரிடம் சொல்லவே அவர் குலகுருவிடம் உண்மையை விளக்கி மன்றாடவே திரும்பவும் வெள்ளைவிநாயகரை  வேண்டிப்பாட  சிலை பழைய நிலைக்கு திரும்பியது.
மோரூர் பாம்பலங்காரர் (நாகபூஷனர்)கோயிலில்
உள்ள வெள்ளைவிநாயர் 

மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் தேசத்தை பார்த்த நிலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அவை இன்றும் சேர விநாயகர், சோழ விநாயகர், பாண்டிய விநாயகர் என்று அழைக்கபடுகிறது. 



கீழ்க்கரை பூந்துறை நாடு திருசெங்கோட்டு மலையில் வரடிக்கல்லில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் பிரசித்தி பெற்றவர். ஒருவருடம் பவுர்ணமி தோறும் மலைக்கு வந்து வரடிக்கல் பிள்ளையாரை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம். திருசெங்கோட்டு மலையில் உள்ள தீர்த்தங்களில் முதல் தீர்த்தமே கணபதி தீர்த்தம்தான். அதை கணபதியே உமையம்மையின் பூஜை தேவைகளுக்காண நீருக்காக உருவாக்கினார் என்பது புராண வரலாற்றுச் செய்தி.
வரடிக்கல் பாண்டீஸ்வரர் கோயில் மற்றும்
விநாயகர் கோயில் (உச்சிப்பிள்ளையார்)


திருச்செங்கோட்டு கோயில் ராஜகோபுர அத்தா மண்டபத்தில்
இருக்கும் பிரம்மாண்ட விநாயகர் சிலை 

 அதே கீழ்க்கரை பூந்துறை நாட்டில் மொளசி சமஸ்தானதிற்குட்பட்ட பட்லூர் காணியின் நட்டாத்தீஸ்வரர் கோயிலில் கிழக்கு பார்த்த விநாயகர் விக்ரகம் இருந்தது (தற்போது ‘திருப்பணி என்னும் பேரில் தெற்கு பார்த்து திருப்பட்டுள்ளது; கொங்கதேசத்தில் தெற்கு பார்த்து எந்த விநாயகரும் இல்லை என்பது பயப்பட வேண்டிய விஷயம்). ஒருமுறை காவிரியில் வெள்ளம் வந்தபோது கோயில் குருக்களின் வேண்டுதலுக்கிறங்கி வெள்ளம தணிந்ததை கொங்குமண்டலச் சதகம் சொல்கிறது. 


பட்லூர் காணிக்குட்பட்ட நட்டாத்தீஸ்வரர் கோயில் 

சுந்தரருக்கு பொன் கொடுக்க சிவபெருமான் பிள்ளையாரை ஆய்மகளிடம் அடகு வைத்த நிகழ்வு வெஞ்சமாங்கூடலூரில் நடந்தது. திருமுருகன்பூண்டியிலே சுந்தரரின் களவுபோன பொருட்களை மீட்க விநாயகப்பெருமான் கூப்பிட்டு வழிகாட்டியதால் கூப்பிடு பிள்ளையாரானார். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கென கொண்டுவந்த பிள்ளையார் வண்டி அச்சாணி முறியவே இறக்கி வைத்த இடத்தில் ஸ்தாபிதமாகிவிட்டார். அந்த க்ஷேத்ரமே இன்றைய புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் ஆகும்.



கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே செய்யப்படுகின்றன. கல்யாணத்திற்கு பெண் பார்க்க துவங்குவதில் தொடங்கி, தாலிக்கு பொன் எடுத்து கொடுக்கும்போதும் (மங்கிளியத்துக்கு கொடுத்தல்), முஹுர்த்தக்கால் போடையிலும், மாப்பிள்ளை அழைப்பு வேளை என பல முறை கணபதி வழிபடப்படுவார். கல்யாணம் துவங்கும்போதும், முடிந்த பின்னரும், முடிந்தபின் வீடு புகுமுன் மணமகன்/மணமகள் ஊர் விநாயகர் கோயிலிலும், வீட்டிற்கு வந்து முதல் காரியமாகவும், தாலி நூல் மாற்றும்போதும் (தாலி வில்லையை விட மஞ்சள் கயிரே முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வழக்கம்) விநாயகர் வழிபாடு நடக்கும். பெண் வீட்டில் கல்யாணம் செய்வதே முறை என்றாலும், தற்போது முறைகெட்டு மண்டபங்களில் பலர் கல்யாணம் செய்வதால் அந்த கல்யாண சத்திரங்களிலேயே விநாயகர் சன்னதி கட்டிவைத்துவிட்டனர். கொங்கதேசத்தின் சிறப்பு வாய்ந்த கல்யாணப் பாடலான மங்கள வாழ்த்தே கணபதியை தொழுதுதான் துவங்குகிறது.


கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள் நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். அதுமட்டுமின்றி கிராமத்தின் கன்னிமூலையில் விநாயகர் இருப்பது பொதுவான விதி. கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர் வழிபாட்டோடுதான் துவங்குகின்றன.



நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும், கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப் பாடல்கள் கூட கொங்கதேசப்பகுதிகளான தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள கொங்கூர் மற்றும் கொங்கவேம்பு கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது. கொங்கதேசத்தில் பட்டிப்பொங்கல் என்று சொல்லப்படும் மாட்டுப்பொங்கலிலும் கணபதி வழிபாடு உண்டு.

உழவுப்பணியின் போது பாடப்படுவது,

காளையே ஏறு...

முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணனார் தம் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே!-(காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்,
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை.
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்.
சப்பாணி பிள்ளையார்க்கு,
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்,
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு-(காளையே)

வண்டு மொகராத-ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
ஆத்துலே ஸ்நானம் பண்ணி
அருகு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க

சப்பாணிப் பிள்ளையார்க்கு

பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். சிறுவர்களின் விளையாட்டு பாடல் முதல், இலக்கியப்பாடல்கள், வேத மந்திரங்கள், நவீன தமிழ் கவிகள், கிராமிய பாடல்கள் என தொடர்ந்து களத்துமேட்டு பாடல்கள் வரை எல்லா தரப்பு மக்களாலும் அணுகப்படுபவர். அந்த பாடல்கள் போற்றுதல் முதல் கேலி கிண்டலாகப் பாடும் அளவு மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர். டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார். அருகம்புற்களை பிடுங்கிப் போட்டால் போதும்; மாலைகள் ஆபரணங்கள் கேட்கமாட்டார். மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார். இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர் என்பதற்கு உதாரணங்களாகும்.



கிராமங்களில் சிறுவர்கள் ஓணானை கொல்வதும், கறுப்பு எறும்புகளுக்கு தீனி வைப்பதும்கூட கணபதியின் பொருட்டான விளையாட்டுதான். கணபதியை வணங்காவிட்டால காரியங்கள் கெடுத்துவிடுவார். உருப்படவிடமாட்டார்  என்று அச்சுறுத்தி தாதாவுக்கு மாமூல் கொடுப்பதுபோல, சிலர் சொல்வார்கள். அது அப்படியல்ல, அவர் புத்தியின் அடையாளம். காரியங்கள் துவங்கும் முன்னர், செக்குமாடு மாதிரி ஒரே கோணத்தில் போகாதே சிந்தித்து, விழிப்போடு சாதுர்யமாகச் செய் என தூண்டுவதே அதன் சாராம்சம். நாம் சொல்வதைவிட வெள்ளைக்காரன் வந்து தோப்புக் காரணத்தை சூப்பர் பிரைன் யோகா என்பர் சொன்னால்தான் நமக்கு அதன் மகத்துவம் புரிகிறது.






இன்னும் ஒரு விஷேசமான விஷயம், கொங்கதேசத்தில் பிள்ளாயா நோம்பி என்று உண்டு. ஒரு சிறுமியை பிள்ளையார் மனைவியாக பாவித்து உட்கார வைத்து தினமும் இரவு கும்மி அடித்து பாடல்கள் பாடி மகிழ்வர். சாணியில் பிள்ளையார் பிடித்து ஊரில் உள்ள பெண்கள் பூக்கள் கொண்டுவந்து சூட்டுவர். தைப்பூசத்திற்கு முந்தைய இரவு நிறைவு பெறும் இந்த விழா 7-9-11 நாட்கள் என்று சூழலை பொறுத்து அந்தந்த கிராமத்தினர் கொண்டாடுவர். விழா துவங்கியதில் இருந்து தினமும் இரவு ஒன்றிரண்டு மணி நேரம் கும்மியடித்து பாடல்கள் பாடுவர். நிறைவு நாள் அன்று பிரசாதங்கள் படைத்து அந்த சிறுமிக்கு புது ஆடை எடுத்துக் கொடுத்து, இரவு முழுவதும் கும்மியும் பாடல்களும் பாடி, விடியற்காலை ஆற்றுக்கு எடுத்துச் செல்வர். பறைமேளம் அடிக்க, பந்தம் பிடித்து ஊர்வலம் போகும். கிராம தெய்வத்தின் கோயிலில் ஊர்வலம் நின்று தரிசனம் முடித்து ஆற்றோரத்தில் உள்ள விநாயகருக்கும் பூஜைகள் செய்வித்து, அந்த சிறுமிக்கு புத்தாடை அணிவித்து பின்னர் சாணிபிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிட்டு வீடுவந்து சேர்வார்கள். இந்த விழாவில் பாடப்படும் பாடல்கள் பக்தி, நகைச்சுவை என்று பலவாறாக இருக்கும். விநாயகர் மட்டுமின்றி கிருஷ்ணர் யசோதை உரையாடல், மாரியம்மன் பாட்டு, நகைச்சுவை பாட்டு என்று பலவாறான பாடல்கள் பாடப்படும்.

உதாரணத்திற்கு,
பூத்த நல்ல பருத்திக்குள்ள - ஏலேலோ
புள்ளி மானு மேயுதம்மா – ஏலேலோ
புள்ளி மான புடிச்சடைக்க – ஏலேலோ
புள்ளையாரு துணை வருவார் – ஏலேலோ

வெடிச்ச நல்ல பருத்திக்குள்ள – ஏலேலோ
வெள்ளி மானு மேயுதம்மா – ஏலேலோ
வெள்ளி மான புடிச்சடைக்க – ஏலேலோ
விநாயகர் துணை வருவார் – ஏலேலோ ...

பிள்ளாயா பிள்ளாயா.. தேவேந்திர பிள்ளாயா...

பிள்ளாயா பிள்ளாயா.. எங்கே எங்கே போயிருந்த..

சில கம்யூனிச, திராவிட, தமிழ்தேசியவாதிகள் விநாயகர் தமிழ் கடவுள் அல்ல என்று பிழைப்புவாத மொழியரசியல் துவங்குவார்கள்; சரி யாரெல்லாம் தமிழ்கடவுள், யாரெல்லாம் வேத கடவுளர்கள், நிலத்திணை தெய்வங்கள் எவை எவை என்று கேட்டால் விடை இருக்காது. ஒருவர் விநாயகர் ஆரியக் கடவுள், ஏழாம் நூற்றாண்டுக்கப்புரம்தான் இங்கே வந்தார் என்றார். “ஆரியமாவது சோளமாவது; அதுதான் ஆரிய திராவிட கட்டுக்கதைகளை எப்பவோ பொய்னு நிரூபிச்சாச்சே! முதல்ல, நீங்க சொல்றமாதிரி ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம் பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான், அப்படி பார்த்தா விநாயகர் இம்மண்ணின் மரபுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த தெய்வந்தா. ரெண்டாவது, ஏழாம் நூற்றாண்டுங்கரது பொய்னு ஏராளமான ஆதாரங்கள் நிரூபிச்சுருக்கு. சிந்தாமணியில் காவிரி உருவானதற்கு காக்கை அகத்தியரின் கமண்டலம் தட்டிவிட்டதையும், பிள்ளையார்பட்டி கோயிலின் காலம் 5ம் நூற்றாண்டு என்ற தொல்லியல் தகவலும், உத்திரமேரூர் மற்றும் வேளச்சேரி புடைப்புச் சிற்பங்களின் தொன்மையும், மேலும் திருமூலர், அப்பர் போன்றவர்களின் பாடல்களும் கணபதியின் தொன்மையை விளங்கச் செய்யும்னு என்று பதிலளிக்கப்பட்டது..



இன்னொரு திராவிடர், “விநாயகரை விட நாய் உசத்தி, விநாயகர் தண்ணில போட்டா முழுகி போறாரு, நாய் நீந்தி வந்துரும்; செலைய தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நாய வளத்துங்க  னு கிண்டலா அறிவ காட்டுனாரு. “தங்கத்தை விட சொரப்புருடை உசத்தி தெரியுமா..? தங்கம் தண்ணில முழுகிரும், சொரப்புருடை மெதந்துகிட்டு வந்திடும்; என்கிட்டே சொரப்புருடை நெறைய இருக்கு, சீக்கிரம் உங்கூட்ல இருக்கற தங்கத்த எடுத்தாங்க னு நண்பன் மூக்கறுத்துவிட்டான்.

பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும் பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும்.

இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்.