Saturday 21 January 2023

காஞ்சிக்கோயில் PRM @ P.R.முத்துசாமி கவுண்டர்

ஈரோடு காஞ்சிகோயில் பள்ளபாளையம், பகுதியை சேர்ந்தவர் பி ஆர் முத்துசாமி கவுண்டர். துவக்கத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக வேலை பார்த்தவர், அவரது இயல்பும் குணமும் கண்டு மக்கள் தேர்தலில் நிற்க சொல்லி வெற்றி பெறச் செய்தனர். தொடர்ந்து பல தேர்தல்களை வென்று பல காலமாக ஊராட்சி தலைவராக இருந்தார். பொறுமை.. நிதானம்.. அனைவரையும்  அரவணைத்து செல்லும் பாங்கு.. தன் ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களையும் தன் குடும்பம் போல் நினைத்து அவர்கள் வீட்டு நல்லது கெட்டது விசேஷங்களை முன் நின்று நடத்துவது.. பொதுவாழ்வில் தூய்மை.. அதிகார ஆணவம் இல்லாமல், யாரையும் இம்சிக்காமல், அச்சுறுத்தாமல் வாழ்ந்தவர்.. சம்பாதிக்கவும், சம்பாதித்தை காப்பாற்றிக் கொள்ளவும் அரசியலுக்கு வரும் அரக்கர்களால் அலைக்கழிக்கப்பட்டு, அல்லல் படும் மக்கள் வாழும் காலத்தில் இவர் போல் பெரியோர்கள் வாழ்வு ஆச்சரியப்படுத்துகிறது. கீழ்பவானி பாசன சங்க தலைவர், கூட்டுறவு வங்கி தலைவர், ஊர்  தர்மகர்த்தா, கொங்கு வேளாளர் பள்ளி கௌரவ தலைவர், தம்பி கலைஐயன் கோவில் அறங்காவலர் குழு தலைவர்.. என பல பதவிகள் அவரைத் தேடி வந்து அலங்கரித்தன. வாழ்வின் இறுதிவரை ஒரு சிறு குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்ந்தவர். தன் குடும்ப சொத்து பெருமளவு விற்று பொதுக் காரியங்களுக்கு செலவு செய்து இறுதியில் வெறும் இரண்டு ஏக்கரை மட்டுமே குடும்பத்திற்கு விட்டுச் சென்றார். அவர் மறைந்து இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டது. 


இன்று அவரது மகன் காஞ்சிகோயில் திரு. கார்த்தி என்பவர் எண்ணெய் செக்கு தொழில் செய்து வருகிறார். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில வருடங்கள் பழகிய போது அவரது பேச்சு இயல்பே மிகவும் வித்தியாசமாக பெருந்தன்மையாக இருந்ததால், நானே அவரிடமும் அவர் ஊரிலும் கேட்டு பெற்ற தகவல்கள் இவை.. நல்ல குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்லிலேயே அவர்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம் என்ற குறளுக்கு மிகச்சிறந்த உதாரணம் கார்த்தி அண்ணன்.. இன்று அவர் சம்மதித்தால் எந்த கட்சியிலும் அவருக்கு பதவியும் உண்டு சீட்டும் உண்டு.. அந்த வட்டாரத்தில் அவர் தந்தையார் சம்பாதித்து வைத்த மரியாதை எப்படி எத்தனை கோடி செலவு செய்தாலும் அந்த மரியாதையை எவனும் சம்பாதிக்க முடியாது. மதிப்பும் மரியாதையும் பணத்தால் மட்டும் வருவதல்ல; குணம் அணுகுமுறை எந்த சூழ்நிலையிலும் மாறாமல் பல காலம் தவம் போல் வாழ்வதால் ஏற்படுவது..

இன்றைய  உலகிலும் அந்த ஊர் மக்கள் இந்த குடும்பத்தை மறக்காமல் இருக்கிறார்கள். பள்ளபாளையம் பேரூராட்சியாகிவிட்டது. இன்று அவரது மருமகள் பேரூராட்சி கவுன்சிலர், அதுவும் சுயேட்சையாக எதிர்ப்பில்லாமல் அன்ன போஸ்டாக ஜெயித்தவர். அவரது மகன் கொங்கு வேளாளர் பள்ளி தலைவர் கூட்டுறவு சங்கத் தலைவர்.. அந்த ஊர் மக்கள் பெரியவர் முத்துசாமி கவுண்டருக்கு திருவுருவச்சிலை எழுப்பி நினைவு மண்டபம் கட்டியுள்ளார்கள்.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

Saturday 1 July 2017

என் அப்புச்சி

அப்புச்சி - SRG @ SR கோவிந்தசாமி கவுண்டர். சேமூர் ராமசாமிகவுண்டர் மகன் கோவிந்தசாமி கவுண்டர். கொங்கு வெள்ளாள கவுண்டரில், தேவேந்திரன் கூட்டம், கீரனூர் செல்வநாயகியம்மன் கோயில். சேமூர் கொத்துக்காரர் அண்ணன் வீட்டார். சேமூர் முழுக்கவே கீரனூர் கோயில் செல்லும் ஆதி, அந்துவன், காடை, விளையன், தேவேந்திரன் கூட்ட கவுண்டர்கள் தான் பெரும்பான்மை, எல்லாரும் உறவின்முறையார்.

தோட்டக்காட்டு ராமசாமி கவுண்டர் சின்னாத்தாள் தம்பதியருக்கு ஐந்து ஆண்மக்கள், கோவிந்தசாமி கவுண்டர், துளசிமணி கவுண்டர் (மேட்டப்பிச்சி) , முத்துக்கவுண்டர், செல்வ கவுண்டர் (மிலிட்டரி அப்பிச்சி), கிருஷ்ண கவுண்டர். பெருமாள் மீது என்ன ஈடுபாடோ மூவருக்கு விஷ்ணுவின் பேர்களை சூட்டியிருக்கிறார்கள். ஐந்தும் ஆண் மகவாய் போக சலித்துப் போய், தவமிருந்து ஒரே ஒரு பெண்ணாவது வேண்டும் என்று இறுதியாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றார்கள். மிலிட்டரி அப்பிச்சி எல்லாரிலும் மிகவும் பக்குவமாக இருப்பார், பேசுவார். அவரே கடைசிவரை என் அப்புசிக்கு நெருக்கமான தம்பியாக இருந்தார். முத்துக்கவுண்டர் குடும்பம் அப்புச்சியின் மரணத்துக்கு தான் ஒன்று சேர்ந்தது.

Image may contain: one or more people

இரண்டரை ஏக்கர பண்ணையம். இரண்டரை ஏக்கர் பண்ணையம் வைத்து அன்று ஆறு குழந்தைகளோடு வாழ்க்கை நடத்த முடிந்துள்ளது. கல்யாணமும் செய்து வைக்க முடிந்தது. மகன்களுக்கு கல்யாணம் ஆன பின்னும் பல காலம் அதே பண்ணையம்தான் சோறு போட்டது. மேலும் ஒவ்வொரு மகனுக்கும் வரிசையாக ஐந்து வீடுகளும் கட்டி வைக்க முடிந்தது.

ராமசாமி கவுண்டர் காட்டு கருப்பனார் கோயில் பூஜை வேலைகளையும் பொறுப்பேற்று செய்துவந்தார். காதில் கடுக்கன், குடுமி எப்போதும் இருக்கும். காலை சூரியனைக் கும்பிட்டுதான் வேலைகள் துவங்குவார். ஓட்டல் டீ கடைகளில் எதுவும் சாப்பிட மாட்டார். குந்த வைத்து உக்கார்ந்து தான் உண்பார். எங்கே போவது என்றாலும் மாட்டு வண்டி தான் இல்லை கால்நடைப் பயணம். பஸ்சில் ஏற மாட்டார். சாதி கட்டுப்பாடும், கருப்பனார் கோயில் பூஜை முறையும் இந்த கட்டுப்பாடுகளுக்குக் காரணம். ராமசாமி கவுண்டரும் சின்னாத்தா ஆயாவும் சுமார் நூறு வருஷங்கள் வாழ்ந்து மறைந்தனர்.

தோட்டக்காட்டு கருப்பனார் சக்தி வாய்ந்த சாமி. ஒரு சமயம் குடும்ப பிரச்சனையின் காரணமாக என் அப்புச்சி கோபித்துக் கொண்டு தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு சென்றாராம். அப்புச்சியின் அம்மா கருப்பனார் கோயில் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் அப்புச்சி தூக்கு மாட்டுவது போல கண் முன்னால் படமாக தெரிந்ததாம். பதறிக்கொண்டு வீட்டிற்குப் போய் பார்த்த போது பிரமை பிடித்தவர் போல தூக்குக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்புச்சி நின்றாராம். தான் என்ன செய்கிறேன் என்ற நினைப்பே இல்லாமல் செய்ததாக சொன்னாராம். இன்றும் எல்லா பங்காளி சண்டைகளுக்கு நடுவிலும் தோட்டக்காடு கருப்பனார் நோம்பிக்கு எல்லாரும் வந்துவிடுவர்.

Image may contain: one or more people

என் அப்புச்சி 'கோவிந்தசாமி' கவுண்டருக்கு அவரது நண்பரின் தங்கை என் அம்மாயி 'துளசியம்மாள்' மனைவியாக வாய்க்கப்பெற்றார். பேர் பொருத்தம். இறுதிவரை நல்ல இணக்கம். ஒருவர் கோபப்படும்போது மற்றவர் அமைதியாக இருப்பார்கள். கோபத்தின் வழியிலும் ஒரு பாசம் காட்டிக் கொண்டு இருப்பார்கள்.

இரண்டு மகன், ஒரு மகள். இரண்டாம் குழந்தையாகப் பிறந்தவர என் அம்மா. அவர் பெற்றோர் பெண் குழந்தைக்கு ஏங்கிய காரணமோ, அல்லது பல சகோதரர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததோ என்ன காரணமோ, பெண் குழந்தைகள் என்றால் என் அப்புச்சிக்கு எப்போதும் பிரியம் அதிகம். பேத்திகள் மீதும் பிரியம் அதிகம். திண்பண்டங்கள் வாங்கி வந்தாலும் என் அம்மாவுக்கு அதிக பங்கு கிடைக்குமாம்; பவுடர், ரிப்பன் எல்லாமே தனி கவனிப்பு . "நீ பொட்டில வச்சுக்காயா.. அவனுங்களுக்கு குடுக்காத" என்று கூறுவாராம். போன் வந்தபிறகு, எதை மறந்தாலும் என் அம்மாவுக்கு போன் செய்வதை மறக்க மாட்டார். காலை சரியாக எட்டு மணிபோல சைக்கிள் கடை ஒரு ரூபாய் போனில் இருந்து அழைப்பு வந்துவிடும். ஒரே நிமிஷம்தான். பேச காரணமே இல்லாவிட்டாலும், தினமும் சலிக்காமல் நலம் விசாரிப்பு தொடரும்.

அப்புச்சி கடுமையான உழைப்பாளி. குடும்பம் வளர விவசாயம் மட்டுமே போதாமல் பால் வியாபாரம் செய்தார். தினமும் போக வர சுமார் 70-80 கி.மீ. சைக்கிள் பயணம், 80 லிட். பால் கேன்களோடு. விடிகாலை 3-4 மணிக்கு எழுந்து கிளம்பினால் பத்து மணிக்குள் வீடு திரும்பிவிடுவார். மிலிட்டரியில் இருந்து திரும்பிய என் சின்னப்பிச்சி ஒருநாள் சும்மா கூட வந்துவிட்டு ஒரு வாரம் படுத்த படுக்கையாகிவிட்டாராம். சில வருஷங்கள் முன்பு நான் ஊருக்கு சென்றபோது தான் பால் எடுத்த கிராமங்களுக்கு வண்டியில் அழைத்துச் செல்லக்கூறி தனது பழைய வாடிக்கையாளர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். பால் வியாபாரம் பின் சைக்கிள் கடை. மகன்கள் தலையெடுத்து நல்ல நிலைக்கு வந்தபின்னரும் சைக்கிள் கடையை விடவில்லை. மரணப் படுக்கையில் விழும் வரை உழைத்தவர். கடையில் பெரிய வியாபாரம் இல்லாவிட்டாலும் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்ந்தார். காலை 4-இரவு 7 வரை வேலைதான். மதியம் சிறிய உறக்கம். நோம்பி நாள் என்றாலும் வீட்டுக்கு வந்து சிறிதுநேரம் இருந்துவிட்டு கடைக்கு சென்றுவிடுவார். கையில் வாட்சு இல்லாமல் இருக்கமாட்டார். எங்கள் வீட்டுக்கு (மகள் வீட்டுக்கு) வந்தால் கூட ஒரு நாளைக்கு மேல் தங்க மாட்டார். "கடை சும்மா கெடக்குது, கேபிள் பணம் குடுக்க ஆள் வரும், கரன்ட் போனால் ஆம்பில்பெருக்கு பேன் போடணும்" என்று பறந்துவிடுவார்.

நல்ல தேக பலம் உடையவர். கால் எலும்புகள் இரும்புபோல இருக்கும். எனது மூக்கு என் அப்புச்சி சாயல்-கொந்தாள மூக்கு என்று அம்மாயி சொல்வார். இறுதிகாலம் வரை தினமும் நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். இரவு ஏழு மணிக்கு தூங்கிவிடுவார். குந்த வைத்து அமர்ந்து உணவருந்துவார். கழுகுப் பார்வை. நடுநிசியில்கூட தெளிவான பார்வை. தூரத்தில் வருவோரையும் அடையாளம் கண்டுவிடுவார். எண்பது வயதிலும் கண்ணாடி அணியாமல் வாசிப்பைத் தொடர்ந்தவர். பீடி புகைக்கும் பழக்கம் மட்டும் இல்லாவிட்டால் நூறு வயதை நிச்சயம் தொட்டிருப்பார். மேட்டப்பிச்சி (அப்புசியின் தம்பி) பீடியால் இறந்தபோது இனி பீடியைத் தொடுவதில்லை என்று எடுத்த சபதம் சில வாரங்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை.

என் அப்புச்சி நல்ல படிப்பாளி. அக்காலப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்திருந்தார். "நால்ர மூண்ற கத்திரிக்கா ஏழர எட்டரை பைசா னா ஒரு கத்திரிக்கா விலை என்ன?" என்ற அவர் பள்ளிக்கூட கேள்வியை நினைவு கூர்வார். வேலையில்லா நேரங்களில் நாளேடு அல்லது புத்தகமும் கையுமாகவே இருப்பார். எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் வீட்டிலிருக்கும் எல்லா புத்தகங்களையும் படித்துவிடுவார். ராமாயணமும் பாரதமும் கந்தபுராணமும் பெரியபுராணமும் எத்தனை முறை படித்திருப்பார் என்று தெரியாது. விடுமுறை நாட்களில் நான் சென்றால் வாசிக்க சிறுவர் மலர், பாலமித்திரன், அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என சேர்த்து வைத்திருப்பார்.சைக்கிள் கடையின் சிறிய பின்னறைக்குள் எனக்கு மிகப்பெரிய ஒரு உலகம் இருந்தது. விக்ரமாதித்தன், தெனாலி ராமன், இதிகாச பாத்திரங்கள், மாயாவி, சுப்பாண்டி, கபீஸ் என புத்தகங்களின் வழியே பல கதாபாத்திரங்களோடு உலவி வாழ்ந்தேன். கபீஸ் கதைகள் நினைவாக, நான் குளரலாக சொன்னதாலோ என்னவோ, என்னை பக்கீஸ் என்று செல்லமாக அழைப்பார். எனது வாசிப்பு பழக்கமெல்லாம் அவர் விதைத்த விதைதான். மரணப் படுக்கையில் விழுந்த போதுதான் அவரது வாசிப்பு நின்றது. அப்போதும் சட்டைப்பையில் அந்த மாதம் எதோ நூல் வாங்க முப்பது ரூபாய் பணம் வைத்திருப்பதாகக் கூறினார். ஏற்றி சீவிய பால் போல் நரைத்த முடி, கால்மேல் கால்போட்டு, ஒரு கையில் புத்தகம், மறு கையில் பீடி என ஒரு தோரணையுடன் படித்துக் கொண்டிருப்பது கம்பீரமாக இருக்கும்.

Image may contain: 1 person, closeup

மிக மிகக் குறைவாகவே பேசுவார். தேவையானதை மட்டும் சொல்வார். கோபப்பட்டால் பேசுவார். அவ்வளவுதான். யார் மனதையும் புண்படுத்தும்படி பேசவும், நடந்துகொள்ளவும் மாட்டார். அவருக்கென்று ஒரு உலகம் இருந்திருக்கிறது, அதனால் புற உலகைப் பற்றி அக்கறை இல்லாமல் இருந்திருக்கிறார்.

எனக்கு நீச்சல் பழக்கியது என் அப்புச்சி தான். எனக்கு முன்னரே என் அக்கா சைக்கில் ஒட்டவும், நீச்சலும் கற்றுக் கொண்டார். அப்போது எனக்கு போட்டியும், எதிரியும் அக்கா தான். கிணற்றில் டியுப் இன்றி என்னை இறக்கிவிட முயற்சித்த போது தப்பி ஓடிக்கொண்டு, 'மாரியாயிக்கு தீத்த கொடம் எடுக்கறேன்னு வேண்டிகிட்டன், அக்கா மட்டும் எனக்கு மின்னாடி எல்லாம் பலவிருச்சே' னு கத்திகிட்டே ஓடியதை அடிக்கடி சொல்லி சொல்லி சிரிப்பார். பின்னாளில் நீச்சல் பழகி தவளை போல கிணற்றிலே கிடப்பேன், காட்டுக்காரர் ராசப்ப கவுண்டருக்கு பயந்து, அப்புச்சியை கிணத்துக்கு போக துணைக்கு அழைக்கும்போது நான் சீக்கிரம் வரமாட்டேன் என அலுத்துக் கொள்வார். அவர் மீசையை சீவி முறுக்கி விளையாடியதையும், நெஞ்சுக்குழியில் இருந்த மருவை நான் உருட்டி விளையாடியதாலே அது சுண்டைக்காய் அளவு பெரிதானதையும் சொல்வார்.

அப்புச்சி அம்மாயி உலகம் மிக குறுகியது. ஈரோடு மார்க்கெட்டில் அம்மாயி வெள்ளரி வியாபாரமும் நின்று, அப்புச்சியின் பால் வியாபரம் சைக்கிள் கடையாக மாறியபின் அவர்கள் உலகம் இன்னும் சுருங்கியது. சேமூர், தோட்டக்காடு, மகள் வீடு, சூளை முனியப்பன் கோயில், வியாழன் சந்தை, சைக்கிள் கடை - இவ்வளவுதான். புரட்டாசி மாசம் பெருமாள் மலைக்கு செல்வதையும், சித்திரை மாசம் சென்னிமலை சிவன்மலை கோயில்செல்வதையும் கடைசிவரை வழக்கமாக கொண்டிருந்தார். விடுமுறைக்கு சென்ற பல வருஷங்களில் சர்ப்ரைஸ் ஆக ஓரிருமுறை பண்ணாரி அம்மன் கோயிலுக்கும் பவானி சாகர் அணைக்கும் அழைத்து சென்றுள்ளார். மெட்ராஸ் எல்லாம் இப்போது பக்கத்து ஊர் போல ஆகிவிட்டது. ஆனால் இருபது வருஷங்கள் முன் அது என்னவோ வெளிநாடு செல்வதுபோலத்தான். ஒருமுறை அப்புச்சி எதோ வேலையாக மெட்ராஸ் சென்றுவிட்டு வரும்போது பேரன் பேத்திகளுக்கு விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள் என்று வாங்கிவந்தார். அவரது பயண அனுபவக்கதைகள் பல காலம் விவாதிக்கபப்ட்டது. அள்ளி போ இல்லி பா என்று கன்னடர்கள் பேசியதைக் கவனித்து வந்து சொல்லியது நினைவிருக்கிறது.

கொஞ்சம் நேர்த்திவாதி (பெர்பக்ஷநிஸ்ட்). சைக்கிள் துடைக்கும் பணி சின்ன மாமாவினுடையது. சைக்கிள் வீலின் கம்பிகளுக்கு இடைப்பட்ட இடத்திலும் அழுக்குகள் போகும்படி துடைக்கவேண்டும். இல்லையேல் சைக்கிளில் துரத்தப்படுவார் மாமா.

இளவயதில் நிலம் போதாமை, குத்தகைக்கு நிலம் ஒட்டியது போன்ற காரணத்தால் விவசாய நிலத்தின்மீது பற்று அதிகம். சிறுவயதில் அப்புச்சி குத்தகைக்கு ஒட்டிய நிலத்தை பின்னாளில் மாமா வாங்கியபோது மிகவும் சந்தோஷப்பட்டார்; பின்னர் அதை விற்று வேறு சொத்து வாங்க மாமா எண்ணியோது தான் உயிரோடு இருக்கும்வரை விற்கக்கூடாது என்று கூறிவிட்டார். சமீபமாக நான் வாங்கிய நிலத்தைக் காண வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டார். நிலம் சீர்திருத்தப்படாமல் கிடந்தது. சீர் திருத்திய பின் வந்து பார்க்கும் நிலையில் அவர் இல்லை. படத்தில் தான் பார்த்தார்.

தங்கள் சொற்கள், செய்கை, என பல வகைகளில் பெரியவர்கள் நமக்கென்று ஒரு உலகைக் கொடுத்தவர்கள். பால்யத்தின் இனிமையான நினைவுகளின் அடையாளம். ஒரு காலகட்டத்தின் அனைத்து அமைப்புகளுக்குமான நினைவுச் சின்னங்கள். மனதின் உணர்வுப் படிமங்கள். ஒவ்வொரு பெரியவர்களை இழக்கும்போதும் ஒரு சகாப்த்தத்தை இழப்பது போலத்தான் இருக்கும். என் அப்புச்சி விஷயத்தில் அது ரொம்பவே அதிகம். எப்போது ஊருக்கு சென்றாலும் என் அப்புச்சியிடம் ஆசி பெறுவது வழக்கம். அவர் வழக்கமாக கூறும் ஆசியுரை,

"ஆல் போல் தழச்சு அருகு போல் வேரோடி வாழையடி வாழையா என்றும் சிரஞ்சீவியா இருக்கனும்பா"
இன்னும் காதில் ஒலிக்கிறது.

Thursday 9 October 2014

அக்னிஹோத்ரம்

அக்னிஹோத்ரம் பாரம்பரிய அறிவியல் தந்த மற்றொரு அற்புதம். காலையும் மாலையும் பத்தே நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். பஞ்சகவ்யம் நிலத்திற்கு உயிரூட்டி, நுண்ணுயிர்சூழலை சீரமைத்து, வளப்படுத்துவது போல, அக்னிஹோத்ரம் காற்று & ஆகாய வெளியை சுத்தப்படுத்தி சீரமைக்கிறது. அதன் ஆற்றல மனித உடல் மற்றும் மனங்களை ஊடுருவுகிறது. போபால் விஷவாயு சம்பவத்தின் பின்னரே மேற்குலகம் அக்னிஹோத்ரத்தின் மகத்துவத்தை உணர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாம் உணர்ந்தோம். பாட்டன், பூட்டன் சொன்னால் பிற்போக்கு என்று ஆயிரம் கேள்விகள் வரும்; வெள்ளையன் சொன்னால் வாயில் விரல்வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்வதுதான் முற்போக்கு அல்லவா. 






இன்று மேற்குலகம், அக்னிஹோத்ரத்தைக் கொண்டாடுகிறது; சுற்றுச்சூழலை சீரமைக்க தினமும் பின்பற்றுகிறது. இன்று புகுஷிமாவிலும் அணுக்கதிர்வீச்சிலிருந்து மீளவும், சுத்தப்படுத்தவும் அக்னிஹோத்ரம் செய்கிறார்கள். அக்னிஹோத்ரம் கொண்டு விதை நேர்த்தி, விவசாய செழிப்பு, மருத்துவம் போன்றவையும் செய்யப்படுகிறது (Homa Farming; Homa therapy). முற்காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் அக்னிஹோத்ர பிராமணர்கள் இருந்தனர். தினமும் அக்னிஹோத்ரம் செய்து மருந்தும் & உரமுமான அதன் சாம்பல் ஊர் குளங்களில் கொட்டப்பட்டது. அதனால் விவசாயமும், மக்கள் உடல்நலமும் செழித்தது. பாரம்பரியமாக அக்னிஹோத்ரம் செய்தவர்கள் கூட இன்று கைவிடும் சூழலைக் கடந்து தற்போது புத்துயிர் பெற்று வளர்ந்து எல்லா தேசங்களிலும் பின்பற்றப்படுகிறது.



ஆரியம், பெண்ணியம் என்று ஈயம் பூசி பிழைப்பு நடத்திய பிரிட்டிஷ் மற்றும் அவர்கள் வாரிசுகளான முற்போக்கு, திராவிட சக்திகளால் சாஸ்திரக்குப்பைகள் என்று பழிக்கப்பட்ட ஹோம வகைக்குள்தான் அக்னிஹோத்ரமும் அடங்கும். இவ்வாளவு தெரிந்தும் 'பூவுலகை' காக்க அவதாரமெடுத்த கம்யூனிஸ்ட்கள் இவற்றை புறக்கணித்தே வந்தனர். பாரம்பரிய ஞானத்தை மூடத்தனமென்று புறக்கணித்து வந்த கம்யூனிஸ்ட்கள் கூட கேரளாவில் "வேத அறிவியலை" ஆய்ந்து அறிய கருத்தரங்கம் நடத்தி, இவ்வளவு காலம் அவர்கள் செய்த அறியாமைப் பிழைகளை ஒப்புக்கொண்டு திருத்திகொள்கிறார்கள். ஆனால் இவ்வளவு காலம் இந்த முற்போக்கு மயக்கத்தால் நாம் இழந்தவற்றிற்கு என்ன பரிகாரம்?


ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்தில் பாத்க்கப்பட்ட பகுதிகளை
அக்னிஹோத்ரம் செய்து சீராக்கும் முயற்சியில் அந்நாட்டவர்கள்.



அக்னிஹோத்ரம் பற்றி சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. மேலே உள்ள வரிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விளக்கமாக ஒரு புத்தகமே எழுதும் அளவு விஷயங்கள் உள்ளன. ஆர்வமுள்ளோர் தேடிப்படிக்கவும். (அக்னிஹோத்ரம் எப்படி செய்யவேண்டும், அதன் தாத்பர்யங்கள் என்ன போன்றவற்றை கீழே கமெண்டில் லிங்க் கொடுத்துள்ளேன்). இயற்கை மீது பற்றுள்ளோர் உங்கள் ஊரில், கோயில்களில் அக்னிஹோத்ரம் நடைபெற ஆவண செய்யவும். இந்த அக்னிஹோத்ரத்திற்கும் நாட்டுப்பசுவின் நெய்யும் சாணமுமே மூலப்பொருள். நாட்டுப்பசுக்கள் நம்மையும், பூமியையும், காற்றையும், நீரையும், விண்ணையும் வளப்படுத்தி, புனிதப்படுத்த மூலகாரணமாவதால் நாட்டுப்பசுக்கள் புனிதம் தான்!




 
 
image
 
 
 
 
 
விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!
படம்: கோழிக்கோடில் அக்னிஹோத்ரம், வேத சங்கத்தினர் நடத்தியது ச.நாகராஜன் போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும் வேத...
Preview by Yahoo
 


 
 
image
 
 
 
 
 
Ajit Vadakayil: NITRIC OXIDE IN AGNIHOTRA, YOGA,...
NITRIC OXIDE IN AGNIHOTRA,  YOGA,  AYURVEDA AND THE VEDAS-  CAPT AJIT VADAKAYIL One of my readers by the name of Chanchal accused me o...
Preview by Yahoo
 


 
 
image
 
 
 
 
 
Ajit Vadakayil: AGNIHOTRA, GHEE, COW DUNG FUEL...
AGNIHOTRA HOMAM,  QUANTUM OIL CLARIFIED BUTTER ,  DRIED COW DUNG CAKES-  CAPT AJIT VADAKAYIL The British are very proud of their Ston...
Preview by Yahoo
 


 
 
 
 
 
 
Homa Therapy International | Web Portal for Agnihotra Ayurvedic Copper Pyramid Healing Fire
Homa Therapy Videos Agnihotra - a Talk by Shree Vasant Paranjpe (part 1) (part 2) (part 3) (part 4) Agnihotra Demonstration Video (Mantra sub-titles in English script)
Preview by Yahoo
 


 
 
image
 
 
 
 
 
Agnihotra.org | Your source for Agnihotra & Homa Therap...
Below you may download the written transcripts for learning mantras, as well as the audio files.
Preview by Yahoo
 



Friday 3 October 2014

நீராதாரங்கள்

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குளம் மற்றும் ஏரி, கிராமத்தின் உயிர் போன்றது. உண்மையான மாரியம்மன் கோயில்கள் அது. நிலத்தடி நீருக்கும், ஈரத்தன்மைக்கும் ஆதாரம். ஏரி குளங்கலுக்கும் கோயில்களுக்கும் தொடர்புண்டு. நீர் வரத்து வாய்க்கால்கள், மற்றும் வடிகால் வாய்க்கால்கள் குளங்களின் உயிர்நாடிகள். ஒவ்வொரு கிராமத்திலும் ஆல் (கிழக்கு), அரசு(மேற்கு), இச்சி (வடக்கு), அத்தி (தெற்கு) போன்ற மரங்கள் நடுவது நியமம் போல குளங்களும் மிக முக்கிய அங்கங்களாகும். மன்னர்கள் முதல் தேவதாசிகள் வரை பல தரப்பினர், தங்கள் உயிர், பொருள் என அனைத்தும் செலவு செய்து, பல பலிகள் எல்லாம் கொடுத்து குளத்தை வெட்டியிருப்பார்கள். ஜலாசய சாஸ்திரம் என்று இதற்குரிய தொழில்நுட்பமே உள்ளது. கொங்கதேசத்தில் குலகுருக்கள் இவ்வாறான ஏரிகளை அமைக்க கிராம வாஸ்து பார்த்து, இடம்கண்டு,  வாய்க்கால்வழிகள் அமைக்க ஆலோசனை கொடுத்துள்ளனர். குள எல்லைகளில் பனை மரங்களும், குளத்தைக் காக்க கருப்பனாரும் இருப்பார். இன்று பொதுநலன், தர்மம் என்பதை சிறிதும் நினைத்துப் பார்க்காத பணக்கார, ரியல்எஸ்டேட், மற்றும் திராவிட பூதங்கள் அந்த குளங்களையும், வாய்க்கால்களையும் விழுங்கி வருகின்றன. கிராம இளைஞர்கள் தங்கள் ஊர் நீராதாரங்களின் பரப்பளவு, வாய்க்கால்கள் போன்றவற்றை தொகுத்து அறிந்து வைத்திருக்க வேண்டும். நதிகள் இணைப்பு, அணைகள் போர்வை எந்த அளவு உதவுகின்றன என்பது வாதத்துக்குரியது. ஆனால் ஏரி குளங்கள் என்றென்றைக்கும் சாஸ்வதமானது. 

ஏழு ஏரிகள் வெட்டி அதன் காரணமாக உயிரை இழந்த
மல்லை ஸ்ரீ தொண்டமா கவுண்டர் 

அமிர்தவல்லி என்னும் தேவதாசி வாய்க்கால் வெட்ட உபயம் தர
அமிர்தவல்லி வாய்க்கால் என்று பேரோடு இருந்த பருத்திப்பள்ளி ஏரியின் நிலை..

கற்பகாயி, சுந்தராயி என்று இரு தேவதாசிகள் தங்கள் கைப்பொருள் அனைத்தையும் கொட்டி கடைசியில் தங்கள் உயிரையும் கொடுத்து வெட்டி வைத்த ஏழூர் ஏரியின் நிலை.

அநேகமாக எல்லா ஊரிலும் ஏரிப் பிரச்னை உண்டு. மீட்க நினைத்தால், முதலில் அந்த ஏரியில் ஒரு பொங்கல் வைத்து ஏரியைக் காக்க ஸ்தாபிக்கப்பட்ட கருப்பனார் அல்லது முனியப்பனுக்கு ஒரு பலி கொடுத்துவிடுங்கள். உங்களின் வெற்றி எளிதாகும். வருடந்தோறும் அக்கோயில் விழா ஒழுங்காக நடந்தாலே குளத்தின் எல்லைகள் அனைவரும் அறிந்து குளத்தின் பராமரிப்பை சரியாக பார்ப்பார்கள். 

தாசில்தார்-கலக்டர் அலுவலகம் சென்றால் உங்கள் ஊர்-ஏரி குளத்தின் பழைய FMP மேப் கிடைக்கும். RTI போட்டு பெற்றுவிடலாம். தற்போது ஆன்லைனில் கூட கிடைக்கிறது. அதைக்கொண்டு ஊராட்சி நிர்வாகம் மூலம் உங்கள் குலத்தின் இடங்களை கண்டறிந்து மீட்டுவிடலாம். தற்போது நூறு நாள் வேலைப்பணிகளில் ஏரி குளப் பணிகளை சேர்த்துள்ளதால் வாய்க்கால் குளங்களை சரி செய்வது எளிது. பொதுப்பணித்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் உபயோகமான தகவல்களைப் பெற முடியும் (ஒரு நல்லவன் கூட இருக்கமாட்டான் என்பதில் உடன்பாடு இல்லை). குளங்களை மீட்கும் எண்ணமுள்ளவர்கள், தனிசெய்தியில் தொடர்பு கொண்டால் எனக்கு தெரிந்த தகவல்களை-தொடர்புகளை பகிர்ந்து கொள்கிறேன். வழிகாட்டத்தான் முடியும். உங்கள் ஊருக்கு-உங்கள் வாரிசுகளுக்கு நன்மை செய்ய யுகபுருஷன் வர மாட்டான் நீங்கள் தான் செய்யணும். 
மொளசியில் வள்ளல் வேலப்ப கவுண்டர் பாண்டியன் படைக்கு உணவிட்டு
அன்னத்தியாகி பட்டம் பெறக காரணமாக இருந்த ஏரியின் நிலை.
புதிய குளங்கள் வெட்டுவதை விட ஏற்கனவே பல நுட்பமான விசயங்களை ஆய்ந்துணர்த்து வெட்டப்பட்ட பழைய ஏரி, குளங்களே சிறந்தவை. தர்ம நூல்கள் கூட, புதிய தர்மங்களை செய்வதை விட தடைபட்ட தர்மத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்புண்ணியம் என்கின்றன. (முக்கியமாக, பழமையான கோயில்கள் பூஜைகள் இன்றி இருக்க, புதிய கோயில்களை கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இது தேவையான செய்தி)
ஈரோடு மாநகரில் இருக்கும் ஏரி கருப்பராயன் கோயில். ஆனால் ஏரி எங்கே??
இந்த கோயில் அமைவிடம் "பெரியார் நகரில்" புரிந்ததா..??

பல ஊர்களில் ஏராளமான இளைஞர்கள் இதுபோல அவர்கள் குளங்களை மீட்டுள்ளனர். இதை நான் எழுதியது, கிராமத்துக்கு-இயற்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு..  "எங்கீங்க.. யாருங்க செய்யறது.. எவன்க கேப்பான்" னு சலிப்போடு பேசுபவர்கள் இங்கே கருத்திட வேண்டாம்; நேராகப் போய் குழியை வெட்டிப் படுத்துக் கொள்ளவும். அதுதான் நம்மால் எளிதாக செய்யகூடிய வேலை. இந்த சோம்பேறிகள் பிறருக்கும் சோர்வைப் பரப்புவதோடு செய்பவனையும் எளிதில் கோமாளியாக்கிவிடுவார்கள்.

Thursday 25 September 2014

மல்லசமுத்திரம் தொண்டைமா கவுண்டர்

மல்லசமுத்திரம் சமஸ்தானம் கொங்கதேசம் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய திருசெங்கோட்டு பகுதி) உபநாடாகும். இப்பகுதியை ஆண்டு வந்தவர் சிற்றரசர்களான பட்டக்காரர்களில் புகழ் பெற்றவர் தொண்டைமா கவுண்டர். துணிச்சல், போராற்றல் மதிநுட்பம், தண்மையான குணம் நிறைந்தவர். பல புலவர்களை ஆதரித்து தர்மம் வளர்த்தவர். தொண்டைமான் என்பது இவர் பெற்ற விருதுப் பெயர். அகளங்க சோழன் என்பதும் இவர்கள் முன்னோர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்ட விருதுப்பெயராகும். நாமக்கல் கோட்டையை மீட்க சோழனுக்காக போராடி வென்றமையால் சோழ அரசன் விஜயராகவ பட்டம் கொடுத்து சிறப்பித்தார். நவாபு ஆட்சியில் பகதூர் பட்டம் பெற்றார். இவ்வளவு பட்டங்கள் அவரது திறமைகளுக்கு கிடைத்த அங்கீகாரங்களாகும்.

தென்னாட்டில் சிலகாலம் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலத்தில், பேரரசுகளிடையே போர் நடந்து வந்தது. போர்க்காலத்தில் பேரரசுகளுக்கு வரிகள் செலுத்தவேண்டியதில்லை என்பதால் தொண்டைமாக்கவுண்டர் மக்களிடம் வரியை வசூலித்து கூட தன் கைப்பொருளையெல்லாம் செலவு செய்து ஏழு பெரும் ஏரிகளையும் அதற்குண்டான நீர்வழிகளையும் வாய்க்கால்களையும் வெட்டுகிறார். அனைத்தையும் ஏழே ஆண்டுகளில் முடிக்கிறார்!. மல்லை நாட்டை கிழக்கும் மேற்க்குமாக சுற்றி பாய்ந்த திருமணிமுத்தாறு மற்றும் பொன்னியாற்றின் நீரை கொண்டு தனது பூமியை வளம் கொழிக்கும் நாடாக்கினார். கொழந்கோண்டை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, ஊமையாம்பட்டி பெரிய ஏரி, செட்டி ஏரி, கோட்டப்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, மங்களம் ஏரி என்பவையாம்.

போர் முடிந்து நவாபு வரி கேட்க, போர்க்காலத்தில் வரி கொடுப்பதில்லை என்றும், அப்படி வசூல் செய்த வரியை செலவு செய்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். வரியை கட்டு என்ற நிர்பந்தத்திற்கு மறுக்கிறார். மன்னிப்பு கேட்டு பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டு என்ற சமரசத்திற்கும் உடன்படவில்லை. யானையை கொண்டு தலையை இடர செய்ய தண்டனை விதிக்கபடுகிறது. அவர் வெட்டிய ஏரிக்கரையிலேயே கொடூரமாக உயிரை விடுகிறார். கற்புநெறி பிறழாத அவரின் தர்மபத்தினி சின்னாத்தா யார் தடுத்தும் கேளாமல் திருமணிமுத்தாற்றின் கரையில் தொண்டைமாகவுண்டரோடு சிதையில் சேர்ந்து தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்.

அவர்கள் உயிர்விட்ட இடத்தில் அவர்களுக்கு எழுப்பப்பட்ட கோயில் தீப்பாஞ்சம்மன் கோயில் என்று வழிபடப்படுகிறது. செல்வதற்கு தடம் கூட இல்லாத, இக்கோயிலின் அவலக் கோலம்தான் இந்த படங்களில் நாம் பார்ப்பது. சுதை வேலைப்பாடுகளோடு அழகு மாறாமல் இருக்கின்றது. உள்ளே பாம்பு சட்டைகளும், சுற்றி குப்பைகூலமும் நிறைந்து கிடக்கின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையன் ஒருவன், தென்னிந்த கிராமங்கள் பற்றிய தனது புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி குறிப்பிடுகையில், தான் நிற்கும் மலை தவிர சுற்றியிருக்கும் பூமியனைதும் இருக்கும் பசுமை குறித்து பூரித்து குறிப்பிடுகிறார். தன் உயிரையும், பொருளையும் கொடுத்து, இவ்வளவு வளமைக்கும் காரணமான தொண்டைமாக்கவுண்டர் நினைவிடம் இருக்கும் நிலை, திருசெங்கோட்டு மக்களின் நன்றியுணர்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஏரிகள் மட்டுமின்றி மல்லசமுத்திரம் ஸ்ரீ சோழீசர் கோயில், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில், மாமுண்டி சிதம்பரேஸ்வரர் கோயில், மங்களம் அழகுநாச்சியம்மன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். அவர் சிலை மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோயிலில் உள்ளது.

இயற்கையை கெடுக்காத நீர் சேமிப்பு/பாதுகாப்பு என்றால் ஏரி, குளங்கள் தான். நிலத்தடி நீர் செறிவூட்டல், மழைநீர் சேமிப்பு அனைத்தும் சாத்தியம். தொண்டைமாக்கவுண்டர் போன்றோர் உயிர் கொடுத்து வெட்டிய நீர்நிலைகளை காப்பாற்றாது, முள்ளும் மண்ணும் மூடவிட்டு, நிலத்திருடர்கள் பிளாட் போட்டு விற்பதை வேடிக்கை பார்த்துவிட்டு தண்ணீர் பஞ்சம் என்று சொல்வது யார் செய்த தவறு? மன்னராட்சி காலங்களில் சிறப்பாக இருந்த நீர் நிர்வாகம் மீட்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஏரி குளங்கள் சீரமைந்தால் தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்பது புலனாகும். மழையாகிய மாரி கடைசியாக வந்து நிற்குமிடம் ஏரி, குளங்கள்தான். அவைதான் உண்மையான மாரியம்மன் கோயில்கள்.

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா

மொழிவாரி மாநிலப்பிரிப்பின்போது ஈவெரா மட்டும் பேசாம அமைதியா இருந்திருந்தா, காவேரி, கிருஷ்ணா, பாலாறு, பவானி, முல்லைப்பெரியாறு என்று எந்த நதிநீர் பிரச்னையும் இன்றிருந்திருக்காது. திராவிட மாயையில் சிக்கிய மக்கள் சக்தியை தன் பக்கம் வைத்திருந்த அவர், ஆங்கிலத்தை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமை குரலை ஒலிக்கவிடாமல் நீர்த்துப் போகச்செய்தார். இன்று நீர்ப்பிச்சைகாரர்களாக, நாடோடிகளாக பலர் மாறியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அடிக்கடி ஏற்படும் வறட்சியின் காரணமாக வெட்டுக்கு விற்கப்பட்ட கோடிக்கணக்கான நாட்டுபசுக்கள் தன் இறுதிநாள் வரை வாழ்ந்திருக்கும்.

இருளர்கள்

இருளர்கள் என்றால் பாம்பு பிடிப்பவர்கள் என்றளவில் மட்டுமே கற்பிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் இயற்கை மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள். குஷ்டம், கேன்சர் முதல் நவீன மருத்துவத்திற்கு சவால் விடும் சிக்கலான வியாதிகளுக்கு மிக எளிய மருந்துகளை வைத்துள்ளார்கள். மந்திரித்து விடுதல்-பாடம் போடுதல் நாமும், Pranic Healing என்று வெள்ளையர்களாலும் சொல்லப்படும் மருத்துவமுறை வரை பின்பற்றுகிறார்கள். கேரள சர்க்கார் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மருத்துவம் செய்யலாம் என்று அங்கீகரித்துள்ளது. அவர்களை வெள்ளையர்கள் மிக நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். பணமோ புகழோ எதிர்பார்ப்பதில்லை; மரபுச்செல்வம் யாராலோ வணிகமாவதை கண்டுகொள்வதும் இல்லை. பாம்புகள் போன்ற நுண்ணுணர்வு மிக்க பிராணிகளை கையாளும் அவர்கள் இயற்கையின் நுட்பகளை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். கொங்கதேசத்தில் சித்தாண்டிகள், குப்பண்ண பரதேசியார், தம்பிக்கலைஐயன், வாழைத்தோட்டத்து ஐயன் போன்றோர் பின்பற்றியதும் இதே வைத்திய முறையே. அக்காலம் தொட்டு இன்றளவும் கொங்கதேசப்பகுதிகளில் இருளர்கள் பெருமளவு வசித்து வருகிறார்கள். ஆதிக்குடிகளான அவர்கள் கன்னியாத்தா என்று சப்த கன்னியர்களையும், சிவபெருமான் மற்றும் ‘ரங்கநாதர்’ வழிபடுகிறார்கள். ஆதிப் பழங்குடிகளான அவர்கள் பேசுவது இருள பாஷை, இதன்மூலம் தொல்காப்பியத்தில் சொல்லியபடி 'திசை சொற்கள்' ஏராளம் உண்டு எனலாம்.
சர்க்கார் திட்டங்கள் போட்டு, உளுத்துபோன மெக்காலே கல்வி கொடுத்து அவர்களையும் நகர 'நாகரீக' சமூக சகதிக்குள் இழுக்க பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது. நவீன சமூகம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து நிம்மதியாக ஆரோக்கியமாக வாழும் கலையை..